Thursday 22 July 2010

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில்
 

பச்சக்கென்று ஒரு வருமான வாய்ப்பு!
வா கனங்கள் பெருகிவிட்டன என்பதற்கு பரபரப்பான சாலைகளும், அதில் பறக்கும் மக்களுமே சாட்சி! வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த நேரத்துக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டும் தொழில்!
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன் வண்டி மட்டும் தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வாகன உரிமையாளர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்காக வண்டியில் கூடுதலாக அலங்காரம் செய்ய ஆசைப் படுகிறார்கள். அதனால், இந்தத் தொழிலுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ஒரு கம்ப்யூட்டர், ஸ்டிக்கர் கட்டிங் மெஷின், கொஞ்சம் ஐடியா - இவை இருந்தால் போதும். இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். கம்ப்யூட்டர் என்பது 20 ஆயிரம் ரூபாயிலேயே கிடைக்கும். ஸ்டிக்கர் கட் பண்ணிக் கொடுக்கும் பிளக்கர் மெஷின் 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கம்ப்யூட்டர் அறிவு கொஞ்சம் இருந்தால் போதும். கட்டர் மெஷின் கொடுப்பவர்களே ஸ்டிக்கர் டிஸைனுக்கான சாஃப்ட்வேர்களையும் கம்ப்யூட்டரில் நிறுவிவிடுவார்கள். அதனால், சாஃப்ட்வேர் செலவு ஏதும் வராது. அதுதவிர, ஆரம்ப கட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் வைத்துக்கொண்டால் போதும். ஆக, 50 ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
கடை வைப்பதற்கு பெரிய அளவில் இடமோ, ஷோரூமோ தேவையில்லை. கம்ப்யூட்டரையும், கட்டிங் மெஷினையும் வைக்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தாலே போதும். கடையின் அளவு முக்கியமல்ல... அதை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆட்டோ மொபைல் ஷோரூம்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அதிகமாக விற்கும் ஏரியா, மெக்கானிக்குகள் அதிகம் இருக்கும் பகுதி போன்ற இடங்களிலும், வாகனங்களைப் பதிவு செய்யும் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அருகிலும் கடை வைக்கலாம்.
ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடைகள், மெக்கானிக் ஷாப்கள் போன்ற இடங்களில் கடையைப் பற்றிச் சொல்லும் சின்ன நோட்டீஸ்களை விநியோகித்து வைத்தால், அவர்கள் நல்ல வாய்ப்புகளைச் சொல்வார் கள். அடுத்ததாக என்னென்ன மாடல்களில் எல்லாம் ஸ்டிக்கர் இருக்கிறதோ, அதை எல்லாம் மக்கள் பார்வையில் படும்படி கடைக்கு வெளியே ஒட்டி வைக்க வேண்டும். அதைப் பார்த்து பலரும் கடையை நாடி வர வாய்ப்பிருக்கிறது.
நல்ல ஆட்டோமொபைல் பொருட்கள் விற்பனை ஆகும் ஏரியா என்றால் ஒரு நாளைக்கு இருபதிலிருந்து முப்பது டூவீலர்களுக்கும், பத்திலிருந்து இருபது கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டித் தரமுடியும். இதர பகுதிகள் என்றால் குறைந்தது பத்து டூ வீலர்களுக்காவது ஸ்டிக்கர் ஒட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த இடங்களில் ஏற்கெனவே பலரும் இதேபோன்ற கடைகள் வைத்து இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது டிஸைன்களை அறிமுகம் செய்து, போட்டியைச் சமாளிக்கலாம்.
குறைந்தபட்சம், நான்கு வண்டி களுக்கு ஒட்டக்கூடிய பெரிய ‘ஒளிரும் ஸ்டிக்கர் ஷீட்’ 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதே அளவு, சாதாரண கலர் ஸ்டிக்கர் ஷீட்’ 8 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளை சேர்த்து ஒட்டினால் 100 ரூபாய் வரை வருமானம் பார்க்கமுடியும். இரண்டு சக்கர வண்டியின் முன் மற்றும் பின் உள்ள நம்பர் பிளேட் ஒட்டித்தருவதற்கு 30 ரூபாய் வசூலிக்கலாம். கார் என்றால் நூறு ரூபாய்வரை பெறலாம். பைக்கின் பக்கவாட்டில் டிஸைன் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 100 ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். கார் வைத்திருப்பவர்கள் 250 ரூபாயில் இருந்து 500 வரை செலவு செய்கிறார்கள்.
இப்போது புதுப்புது மாடல்களில் ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. சில வாடிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோவை ஒட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய போட்டோவையேகூட வண்டியில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள விருப்பப்படுவார்கள். அப்படியான உருவத்தை நாமே ஸ்டிக்கர் செய்துதந்து கூடுதலாக வசூலிக்கலாம்.
அதோடு போலீஸ், அட்வகேட், டாக்டர் போன்ற துறை சார்ந்த ஸ்டிக்கர் களையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படும் வகையில் வாசகங்களையும் கொடுத்து அசத்தி, கூடுதல் கஸ்டமர்களைப் பிடிக்கலாம்.
இப்படி வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருமானம் பார்ப்பதோடு, அரசு விழிப்பு உணர்வு பிரசார ஸ்டிக்கர்கள், கடைகளுக்கான விளம்பர ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுப்பதிலும் லாபம் பார்க்கலாம். இவற்றைத் தவிர கம்பெனி பெயர், வீட்டின் முன்னால் வைக்கும் பெயர் பலகைகள் எழுதுதல், ஸ்கூல் பைகளில் ஸ்டிக்கர்களை பிரின்ட் செய்து தருவது போன்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
செலவு என்றால் கடை வாடகை, ஒரு ஆளுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், போன் பில் இவை மட்டும்தான். குறைந்தது ஐயாயிரம் ரூபாய் இதற்கு செலவு ஆகும் என்று வைத்துக்கொண்டால் கூட ரூபாய் 15,000 வரை வருமானம் பார்க்கமுடியும்.
கீ செயின்கள் சின்னச் சின்ன பொம்மைகள், காரில் வைக்கிற அழகுப் பொருட்களை வாங்கி வைத்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
என்ன... இது டக்கர் பிஸினஸ்தானே!

தொடர்: ‘மூளை’தனம்

தொடர்: ‘மூளை’தனம்

தொழில்

‘மூளை’தனம்
மி னரல் வாட்டர் பாட்டிலை எப்போதாவது வாங்கி இருப்பீர்கள். பயன்படுத்திய பாட்டிலின் அடியில் இப்படி ஒரு முத்திரை இருக்கும். கவனித்திருக்கிறீர்களா... அந்த முத்திரைக்கு அர்த்தம் என்ன? சொல்கிறேன். அதற்குமுன்...
புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘இதைப்போய் நான் செய்வதா..? எனக்கு அதில் அனுபவமில்லையே! என் வீட்டுக்குத் தெரிந்தால் அனுமதிக்கவே மாட்டார்கள்’ என்று சிலர் தொழிலுக்குள் இறங்கும் முன்பே தயங்குவார்கள். அதுபோன்ற ஆட்கள் ஜெயிப்பது சிரமம்தான். காரணம், தொழிலில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய குணமே கூச்சம், தயக்கம், பயம் இவற்றை உதறிவிட்டுக் களமிறங்குவதுதான்.
பலரும் பார்க்கத் தயங்கும் வேலைகள்கூட சிலசமயம் லட்சங்கள் புரளும் பெரிய லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கும். காக்கைகள் போல், நகரின் குப்பைகளில் கிடக்கும் பாட்டில்கள், பாலீதீன்களைச் சேகரிக்கும் ஆட்களைக் கவனித்திருக்கிறீர்களா..?
ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு சக்கர, மூன்று சக்கர சைக்கிள்களில் பிஸியாக பழைய பேப்பர், பாட்டில் கள், வீண்பொருட்களை வாங்கும் வியாபாரிகளைப் பார்த்திருக் கிறீர்களா..?
பழைய புத்தகங்கள், இரும்புச் சாமான்களை வாங்கி கடை முழுக்க அடுக்கி வைக்கும் வேஸ்ட் மார்ட் களின் பிஸியைக் கவனித்திருக் கிறீர்களா..?
அவற்றுக்குப் பின்னால் ஒரு பெரிய இண்டஸ்ட்ரியே இருக்கிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாறும் அந்த வட்டச் சுழலுக்குப் பின்னால் இருக்கிற பிஸினஸ் அற்புதம், ஐடியாக்களால் நிறைந்தது.
நாம் பயன்படுத்திய பொருட்களை என்னவாகத் தருகிறோமோ, அதே பொருளாக மீண்டும் மாற்றித்தர இவர்களும் ஒருவகையில் உதவுகிறார்கள். இதுதான் ரீ-சைக்கிளிங் துறை.
இப்படி தெருவில் பிளாஸ்டிக் சேகரித்து அதை ஒரு காலி மனையில் போட்டு வைத்திருந்தார் ஒருவர். அதைக் கவனித்த மனையின் உரிமையாளர், ‘கண்ட குப்பையையும் என் இடத்தில் போட்டு நாறடிக்காதே! மரியாதையா எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடு!’ என்று மிரட்டினார். ‘வேணும்னா இந்த இடத்துக்கு மாசம் 500 ரூபாய் வாடகை தரட்டுங்களா..?’ என்று அந்த நபர் கேட்க... மனையின் உரிமையாளருக்கு ஆச்சர்யம். சும்மா கிடக்கிற இடத்துக்கு வாடகையா..! ‘சரி... ஆனா, நான் இடத்தை விக்கிறப்போ காலி பண்ணச் சொல்வேன். மறுபேச்சு பேசாம போயிடணும். ஓகே!’ என்று கிளம்பிப் போனார். சில மாதங்கள் கழித்து, இடத்தை விற்கும் முடிவில் அந்த நபரைக் காலி பண்ணச் சொன்னார் உரிமையாளர். ‘பண்ணிடறேனுங்க... இப்போ, இந்த இடம் எவ்வளவுக்குப் போகுதுங்க..?’ என்று பணிவாகக் கேட்ட நபர், அவர் சொன்ன விலைக்கு அந்த இடத்தைத் தானே வாங்கிக்கொண்டார். சாதாரண வேலையிலும் சூப்பர் வருமானம் வரும் என்பதற்கு அந்த வீண் பொருட்கள் சேகரிப்பவர் மாதிரி ஆட்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். ரீ-சைக்கிளிங் துறையில் இது சாத்தியமாக இருக்கிறது.
பாட்டில்களை வாங்கி, அதை மறுபயன்பாட்டுக்கு விடுவது என்பது ஒருவகை. பாட்டில்களில் அடைக்கப் பட்டு வரும் ஜூஸ், ஊறுகாய், சில மருந்துப் பொருட்கள், மதுபான வகைகள் என்று கண்ணாடி பாட்டில்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு அதில் மீண்டும் தங்கள் தயாரிப்பை அடைத் துத்தர, நிர்வாகமே வாங்கிக் கொள்வது ஒருவகை.
பிளாஸ்டிக் கேன்களைப் பொறுத்தவரை, அதை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது சிரமம். அது ஜூஸ் பாட்டிலோ, ஷாம்பூ பாட்டிலோ... புதிய கேனில் அடைத்துத் தருவதுதான் வாடிக்கையாளர்களைக் கவரும். தண்ணீர் பாட்டில் களையே எடுத்துக் கொள்ளுங் களேன். அதைப் பயன்படுத்திய பிறகு, ‘நசுக்கி வீசுங்கள்’ என்ற வாசகம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், அப்படியே குப்பைத் தொட்டியில் வீசினால், அதை மீண்டும் ஒருமுறை யாரேனும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதற்காகச் செய்யப்படும் எச்சரிக்கை. சுகாதாரம் ஒருபக்கம்... பழைய கேனிலேயே தண்ணீர் அடைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் புதிய கேனை வாங்க வைக்கும் வியாபார உத்தி மறுபக்கம்!
இதில் ஒருவிஷயத்தில் ஆறுதல் அடையலாம். நாம் பயன்படுத்திய கேனிலேயே மறுபடியும் தங்கள் தயாரிப்புகளை அடைத்துத் தருவதில்லை அவர்கள். புதிய கேனில்தான் தருகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆரம்பத்தில் அந்த முத்திரை பற்றிச் சொன்னேனே... இப்படி ஒரு முத்திரை, கேனின் அடியில் இருந்தால், அது ரீ-சைக்கிள் செய்யப்படக்கூடிய பிளாஸ்டிக் என்று அர்த்தம்.
தெ ருவில் அலைந்து, வீடு தேடி வந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்குபவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். அதை வாங்குகிற கடைக் காரர் மொத்த வியாபாரி ஒருவரை நாடிச் சென்று விற்பார். அவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். இதையெல்லாம் மொத்தமாக பிரித்துச் சுத்தப்படுத்தி, வகை வாரியாக ஒழுங்கு செய்து பேக் பண்ணி ரீ-சைக்கிளிங் செய்கிற பெரிய நிறுவனத்தாரிடம் கொடுப்பார் அந்த மொத்த வியாபாரி.
அங்கே ரீ-சைக்கிளிங் நடந்து அதிலிருந்து புதிய கன்டெய்னர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.
இதுபோன்ற சுழற்சியில் பல ஆயிரம் தெரு வியாபாரிகள், சில ஆயிரம் சிறு வியாபாரிகள், நூற்றுக்கணக்கான பெரு வியாபாரிகள், சில நிறுவனங்கள் என்று எத்தனை அழகாக லாபம் பங்கிடப்பட்டு வருகிறது பார்த்தீர்களா..? இவை எல்லாம் எதிலிருந்து..? நாம் வீண் என்று தூக்கி எறியும் அல்லது சிறு தொகைக்கு தரும் பொருட்களில் இருந்து!
இந்தத் துறையில் கடந்த பல வருடங்களாக இருக்கிற ராஜகோபால், புழல் பகுதியில் ஒரு பெரு வியாபாரியாக மாதம் ஒன்றுக்கு 40 டன் பெட் பாட்டில்களை பெரிய நிறுவனங்களுக்கு விற்பவராக இருக்கிறார். இந்தோ பாலிமர் என்ற நிறுவனத்தின் சார்பாக இத்தொழிலைச் செய்து வரும் இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். சௌதி அரேபியாவுக்குப் போய் திரும்பிய இவர், உறவினர் ஒருவர் இதே தொழிலைச் செய்வதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இந்த யூனிட்டை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பலருக்கு வேலை வாய்ப்பும் தந்திருக்கிறார்.
கரகர சத்தத்தோடு, இவரது ஃபேக்டரியில் பாட்டில்கள் நொறுங்கி சதுர பேல்களாக அடைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாக இருக்கிறது.
இவர் போன்றோரிடமிருந்து பெரிய நிறுவனங்கள் வாங்குகின்றனவே... அவர்கள் என்ன செய்கிறார்கள்..? இந்த பழைய பிளாஸ்டிக் பேல்களை வாங்கி, கலர் வாரியாகப் பிரித்து சுத்தம்செய்து, மிக்ஸி போன்ற பெரிய மெஷின்களில் போட்டு துண்டு, துண்டாக நொறுக்குகிறார்கள். மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட பவுடர் போல் ஆக்கி, மீண்டும் சுத்தம் செய்கிறார்கள். அதன்பிறகு, அது புதிய பாட்டிலாக உருமாற்றம் பெறுகிறது. நாம் கடையில் வாங்கும் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களைத் தயார் செய்து தருகிறார்கள்.
சென்னையை அடுத்த மணலியில் இருக்கிற ஃப்யூச்சுரா ( futura ) நிறுவனம் பாலியஸ்டர் பொருட்கள் தயாரிப்பதோடு, இது போன்ற ரீ-சைக்கிளிங் துறையிலும் மிளிர்கிறது. ரூபாய் 500 கோடிக்கும் மேலே டர்ன் ஓவர் பார்க்கிற இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ-வாக இருக்கிறார் ரங்கராஜன்.
‘சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இதுபோன்ற மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி ரீ-சைக்கிளிங் செய்கிற பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இதன்மூலம் மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. அதுபோக, தவறான பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் கெடுவதையும் தவிர்க்க முடிகிறது. போட்டிருக்கும் முதலீட்டுக்கு ஏற்ற வகையான பெரிதான லாபம் என்று எங்களுக்குக் கிடைக்காமல் இருந்தாலும் இந்தத் துறையின் பாதை பிரகாசமாக இருக்கிறது. உலக அளவுத் தொடர்பு களோடு எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ரங்கராஜன். இந்த நிறுவனத்துக்கு போட்டி என்று பெரிதாக இங்கில்லை. இதனால் எதிர்கால வளர்ச்சி அபரிமிதமாக இருக்க வாய்ப்பு தெரிகிறது.
இப்படித் தனித்தன்மை யோடு உள்ள, போட்டி குறை வாக உள்ள, யாரும் இறங்கத் துணியாத தொழில்களில் குதிக்கும் தைரியம் கொள்ளுங் கள். மூளையை முழுதாகப் பயன்படுத்தி, திட்டமிட்டுக் காய் நகர்த்தினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். வலுவான வருமானம் வந்தே தீரும்!

சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu

தொழில் தொடங்கலாம், வாங்க!

சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu 

தொழில்

சணல் பைகள்... ஜூட் வருமானம்!
பி ளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளப்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும்.
இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை.
இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 30 ரூபாய் முதல் 90 ரூபாய்வரை தரத்துக்கு ஏற்ப கிடைக்கிறது. 200 மீட்டர் அளவுள்ள ரோலாக மொத்தமாக வாங்கும்போது விலை கொஞ்சம் குறைவாகவே கிடைக்கிறது. பல நிறங்களிலும் கிடைக்கும் இந்த சணல் ஷீட்களை டீலர்களிடம் பேசி வாங்கிக்கொண்டால் பை தயாரிக்கத் தொடங்கிவிடலாம்.
சாதாரண பைகள் என்பதைத் தாண்டி இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் சணல் பைகள் உபயோகிப்பது ஃபேஷனாகவே இருக்கிறது. அவர்களது ரசனைக்கு ஏற்றபடி பல மாடல்களில் பைகளைத் தயாரிப்பது லாபத்துக்கு வழி வகுக்கும். செல்போன் கவரில் இருந்து விசிட்டிங் கார்ட் வரை சணல் தயாரிப்புகளில் சாத்தியமாக இருக்கிறது. இதனால் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
ஒரு பை தைப்பதற்கு நூல், கைப்பிடி, சணல் ஷீட் போன்றவற்றின் விலை மற்றும் தைப்பவரின் சம்பளம் என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால் அதிகபட்சம் பதினைந்து ரூபாய் ஆகும். இந்த பை சாதாரணமாக 20 முதல் 25 ரூபாய்க்கு விலைபோகிறது. இதிலேயே ஏதாவது டிஸைன்கள், மாடல்கள் போன்றவற்றை உருவாக்கினால் அதற்கேற்ப விலையை ஏற்றிக் கொள்ளலாம்.
ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 பைகளைத் தயாரிக்கலாம். டிஸைன் கொண்டவை என்றால் ஒரு நாளைக்கு 20 முதல் 30 பைகள் வரை தயாரிக்கமுடியும். இந்தப் பைகளில் ஸ்கிரீன் பிரின்ட் செய்துகொடுத்து இன்னும் அதிக வருமானம் பார்க்கமுடியும். மாதத்துக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானம் என்பது சர்வ நிச்சயமான ஒன்றாக இருக்கும் தொழில் இது!
இப்போது விற்பனையாகும் மாடல்கள் என்றால் ஷாப்பிங் பைகள், வாட்டர் பாட்டில் வைக்கும் பைகள், ஃபேன்ஸி பைகள், தோல் பை மாடல்கள், செல்போன் வைக்கும் பைகள், சி.டி கவர்கள், விசிட்டிங் கார்ட்கள், கோட் போன்றவை. 20 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனையாகின்றன.
தயாரிப்பெல்லாம் சரிதான். இதை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்று தோன்றலாம்.
இப்போது எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் துணிக் கடைகளிலுமே சணல் பைகளுக்குத் தனியான தேவை இருக்கிறது. அவர்களுடைய பொருட்களை வைத்துக் கொடுப்பதற்கு பிளாஸ்டிக் பைகளைப் போலவே சணல் பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள். உங்கள் ஏரியாவில் உள்ள துணிக்கடைகளிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் பேசி ஆர்டர் பிடிக்கலாம்.
அதேபோல், திருமணம் போன்ற விழாக்களில் தாம்பூலப் பைகள் கொடுப்பதற்கு இப்போது சணல் பைகளையே அதிகம் நாடுகிறார்கள். அதுபோன்ற திருமணம் நடத்தித் தரும் கான்ட்ராக்டர்களைப் பிடித்தால் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். அதோடு, ஃபேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், கைவினைப்பொருட்கள் விற்பனைக் கூடங்களிலும் போய் பேசி, அங்கு உங்கள் பைகளை டிஸ்ப்ளே செய்ய வைத்து பிஸினஸைப் பெருக்கலாம்.
லீவு முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது, பள்ளிகளுக்குச் சென்று மொத்தமாக ஸ்கூல் பைகளுக்கு ஆர்டர் பிடிக்கலாம். மேலும், கம்பெனிகளை அணுகி அவர்களது விழாக்களுக்கு ஃபைல்கள், பைகள் போன்றவற்றைத் தயாரித்து தரலாம். விழாக்கள் நடக்கும் போது அங்கு ஸ்டால் போட்டும் விற்பனையைப் பெருக்கலாம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வியாபார வாய்ப்புகள் நிறைந்து கிடக்கும் தொழில் இது.
சணல் களத்தில் இறங்குங்க... சல்லுனு காசை அள்ளுங்க!

தயாரிப்பு 

செங்கல் சூளை செமத்தியான லாபம்!

செங்கல் சூளை செமத்தியான லாபம்!

தொழில்

செங்கல் சூளை செமத்தியான லாபம்!
தி னம் தினம் ஏதாவது ஒரு இடத்தில் பூமிபூஜை போடப்படுகிறது... கட்டட வேலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. கட்டடங்களுக்கான தேவை தீரப் போவ தில்லை. அதனால், கட்டுமானத்தின் அடிப்படைத் தேவையான செங்கற்களைத் தயாரிக்கும் தொழில் ஏறுமுகத்தில்தான் இருக்கும். சொந்தமாக கொஞ்சம் இடம் இருந்தால் இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.
‘‘கொஞ்சம் நெளிவுசுழிவுகளோடு தொழில் நடத்தும் எண்ணம் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது’’ என்றபடி செங்கல் சூளைக்கான தேவைகளைச் சொல்லத் தொடங்கினார் இந்தத் தொழிலில் முப்பது வருடங்களாக ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த ஜேக்கப்மனோகர்.
‘‘செங்கல் சூளை அமைப்பது என்பது கொஞ்சம் அதிக முதலீடு தேவைப்படும் தொழில். சூளையை அமைப்பதற்கே சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை தேவைப்படும். சூளையை அமைப்பதற்கு முப்பது, நாற்பது சென்ட் நிலம் தேவைப்படும். சொந்த நிலமாக இருந்து மண் வாகும் நன்றாக இருந்துவிட்டால் பாதி சிரமம் குறைந்துவிடும்.
வாடகைக்கு இடம் பிடிக்கும்போது குறைந்த பட்சம் நான்கு வருடங்களுக்காவது ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், லட்சரூபாய் செலவு செய்து அமைக்கும் சூளை குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பயன்படும். இடையில் நிலத்தை விடவேண்டிய சூழல் வந்தால் நமக்குத்தான் நஷ்டம்.
செங்கற்களை அடுக்கி, சரியான முறையில் தீமூட்டி, சுட்டெடுக்கும் விதத்தில் மூன்று அடுக்கு களைக் கொண்ட அமைப்புதான் சூளை.
அடுத்து செங்கற்களை உருவாக்கும் இரும்பு பெட்டி (அச்சு) செய்து வாங்கிக் கொள்வது, மண்வெட்டி, சட்டி, ஓலை, தார்ப்பாய் போன்ற தளவாடச் சாமான்களை வாங்குவது, தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைப்பது போன்ற அடிப்படைத் தேவைகளைச் செய்யவேண்டும். இவை எல்லாமே ஒருமுறை செய்யப்படும் முதலீடுதான். இவற்றைக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு செங்கற்களைத் தயாரிக்கமுடியும்’’ என்ற ஜேக்கப், ‘‘பொதுவாக செங்கல் சூளைக்கு வேலைக்கு வருபவர்களுக்கு நிறைய முன்பணம் கொடுத்துத்தான் அழைத்து வர வேண்டியிருக்கிறது. அதில் கொஞ்சம் கவனமாக இருந்து தொழிலாளிகளைச் சரியாக பிடித்துவிட்டால், வேறு பிரச்னை களில்லை’’ என்று சொல்லிவிட்டு, அடுத்து செங்கல் தயாரிப்புப் பற்றி பேச ஆரம்பித்தார்.
‘‘சூளையில் அதிகபட்சமாக 50 ஆயிரம் செங்கற்களைத் தயாரிக்கமுடியும். அதற்குக் குறைவாகத் தயாரிக்கும்போது எரிபொருளும் வீணாகத்தான் செய்யும். அதனால், ஒரே நேரத்தில் 50 ஆயிரம் செங்கற்களைத் தயாரிக்கத் திட்டமிடுவதுதான் லாபகரமானது.
செங்கற்களை உருவாக்க முதலில் தேவைப் படுவது மண்கலவை! ஒரு சூளை செங்கற்களை உருவாக்க குறைந்தபட்சம் 50 டெம்போ மண் தேவைப்படும்! அதில் 10 வேன் வண்டல் மண்ணாக இருக்கவேண்டும். அதற்குதான் செங்கலை உறுதியாக இறுக்கிப்பிடிக்கும் தன்மை உண்டு. மீதியுள்ளவை சாதாரண மண்ணாக இருந் தால் போதும். ஒரு வேன் மண்ணுக்கு 300 ரூபாய் ஆகும். இது ஊருக்கு ஊர் மாறுபடலாம்.
அடுத்தது, சரியான விகிதத்தில் இந்த மண்ணைக் கலந்து, தண்ணீர் விட்டு பதமாக்கி, ஒருநாள் அப்படியே போட்டுவிட வேண்டும்! அடுத்தநாள் மீண்டும் தண்ணீர் சேர்த்து பதமாகக் குழைத்து அச்சில் போட்டு ஈர செங்கல் களாக தரையில் போட வேண்டும். ஒரு அச்சில் மண்ணை அடைத்து தரையில் தட்டினால் மூன்று செங்கல் கிடைக்கும். இப்படி 1,000 செங்கற்களை உருவாக்கித்தர தொழிலாளிக்கு கூலி 260 ரூபாய்.
ஈர செங்கல் இரண்டு நாட்கள் நன்றாக காற்றில் உலரவேண்டும். பின்னர் சூளையில் அடுக்கி, சுட்டெடுக்க வேண்டும். இதற்கு தென்னை, பனை, ரப்பர் மர விறகுகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் சூளையில் இருந்து அப்படியே செங்கற்கள் லாரியில் ஏற்றப்பட்டுவிடும்’’ என்றார்.
எல்லாம் சரியாக இருந்து வெயிலும் நமக்கு சாதகமாக இருந்தால் பதினைந்து நாட்களிலேயே ஒரு சூளை செங்கற்களை உருவாக்க முடியும். செங்கல் தயாரிப்பின்போது, மழை பெய்தால், நஷ்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல சூளையின் அடியில் அடுக்கப்படும் செங்கற்கள் பயன்படுத்த முடியாமல் போகும். அதைத் தவிர்த்துதான் விற்கமுடியும்.
பொதுவாக 1,000 செங்கற்கள் 1,800 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விலை போகும். ஒரு சூளை செங்கற்களுக்கான செலவாக 75 ஆயிரம் ரூபாய் போனாலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கிறது. இதுவே, 15 நாட்களில் ஒரு சூளை செங்கற்களை உருவாக்கும்போது ஒரு மாதத்துக்கு இரண்டு சூளை வைத்தால் 60 முதல் 80 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
‘சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன், மின்சார இணைப்பு, தொழில் சம்பந்தமான வரி’ போன்றவற்றில் அரசு பல சலுகைகளைத் தருகிறது. எனவே செங்கல் சூளை... செம லாபம் தான்!
மா வட்ட தொழில் மையத்தில் செங்கல் சூளை ஆரம்பிக்க பதிவு செய்து, பஞ்சாயத்தில் தொழில் தொடங்க அனுமதி (லைசென்ஸ்) பெற வேண்டும். கடன் பெறுவதற்காக, செங்கல் சூளை தொழில் தொடங்குவதற்கு ஆகும் செலவுகள், தொழிலில் கிடைக்கும் லாபம் குறித்த ஒரு மினி ப்ராஜெக்டை, அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சொத்து ஜாமீனாக கடன் பெற விரும்பும் தொகையைப் போல இருமடங்கிலான, அரசு மதிப்பீட்டிலான நம்முடைய சொத்துக்களை காட்டவேண்டும். அடுத்து, செங்கல் சூளை ஆரம்பிக்க தேவையான சொந்த இடத்தையோ, அல்லது குறிப்பிட்ட வருடத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கும் இடத்தையோ அதிகாரிகள் பார்வையிட்டு கடன் தருகிறார்கள்.
கடன் தொகையை 3 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்குள் அரசு நிர்ணயிக்கிற வட்டி விகிதத்தில் திரும்பச் செலுத்தவேண்டும். இந்தத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கடந்த காலங்களில், முதன் முதலில் தொழில் தொடங்குபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகையை மானியமாக அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் இப்போது, இந்தத் தொழிலில் மானியத் தள்ளுபடி தரப்படுவதில்லை! சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் வரை கடனாக பெறலாம். குடிசைத் தொழில் ஆதலால், இந்த தொழிலுக்கு அரசாங்கம் விற்பனை வரி விலக்கு தருகிறது.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
தேவை என்னும் தேவதை!
 
வெறுங்கையால் முழம் போட்டு கோடிகளைப் பிடித்தவர்
தரும் பிராக்டிகல் தொடர்!
பி ஸினஸில் சக்ஸஸ் ஒன்றுதான் குறிக்கோள் என்று ஓடுபவர்களுக்கு யார் எத்தனை இடையூறு கொடுத்தாலும் சோர்வடையாமல் தங்கள் இலக்கு நோக்கியே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
இன்று உலகம் முழுக்கப் பிரபலமாக இருக்கிற ஜி.இ எனப்படும் ஜெனரல் எலெக்ட்ரிகல்ஸை நிறுவியர் தாமஸ் ஆல்வா எடிசன். யெஸ், பல்ப் கண்டுபிடித்த அதே எடிசன்தான்.
ஆரம்பத்தில் மிகக் கஷ்டப்பட்ட எடிசனுக்குள்ளே எப்போதும் இருந்தது ஒரு போராட்ட குணம், எடுக்கிற காரியத்தில் எல்லாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறி, வேகம்! அவரது வெற்றிக்கு அதுவே காரணம்.
அப்படி ஒரு செயல் திட்டத்தையும் எதிலும் மனதை அலைபாய விடாமல் வெற்றியை நோக்கி தொடர் பயணம் மேற்கொள்கிற குணத்தையும் முகமது மீரானிடம் பார்த்திருக்கிறேன். உலகப் புகழ்பெற்ற ரெனால்ட்ஸ் பேனாவை இந்தியாவில் விற்க அதிகாரம் படைத்தவர். இந்தியாவில் திருப்தியான எல்லையைத் தொட்டபிறகு, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் விரிவு செய்திருக் கிறார். ஒரு நாளைக்குப் பத்து லட்சம் பேனா தயாரிக்கும் அளவுக்கு பணியாட்கள் பலத்துடன் இருக்கிறார்.
மீரான், இந்த இடத்தை எட்டக் காரணம், அவரது கடுமையான உழைப்பு! இத்தனைக்கும் அவர் பிஸினஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல; கைநிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு சவுதியில் மிட்சுபிஷி வாகன விற்பனை நிறுவனத்துக்காக வேலை செய்தவர். யாரோ, எங்கோ தூண்டிவிட்ட பிஸினஸ் ஆர்வம் அவருக்குள் ‘தொழில் தொடங்கு!’ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது.
எதற்கும் ஒரு சரியான சந்தர்ப்பம் வரவேண்டும் இல்லையா..? அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் முதலாளி இலங்கைக்காரர். அப்போதே, இலங்கையின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர். அவருடைய பல தொழில்களில் ஒன்று ரெனால்ட்ஸ் பேனாவை இறக்குமதி செய்து இலங்கையில் விநியோகிப்பது. ஏரியா மேனேஜர் வேலைக்காக மீரானை வரவழைத்த அந்த முதலாளி, இவரது தொழில் வேகம் பார்த்து ஒருநாள் கேட்டிருக்கிறார். ‘மீரான்... இலங்கை 2 கோடி மக்களைக் கொண்டது. இங்கே அதிகபட்ச மக்களைச் சென்றடைந்தாலும் டர்ன் ஓவர் குறைவாகவே இருக்கும். இந்தியாவில் இந்த பேனாவுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அங்கே சென்று விற்க முடியுமா..?’ என்றார்.
இந்த இடத்தில் 2 விஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆள் தேர்வு. இந்த வேலையை இவர் சரியாகச் செய்கிறார் என்பதை அடையாளம் கண்டுபிடிக்கவேண்டியது, ஒரு நல்ல முதலாளிக்கு அழகு. பொருத்தமான ஆளை நியமித்துவிட்டால், வியாபாரம் தானாகவே பெருகும். வருகிற நபர் சம்பளத்தைக் குறிவைத்து வருகிறாரா..? அல்லது, எனக்குப் பணம் என்பது இரண்டாம் பட்சம், கொடுக்கப்பட்ட கடமையை முடிப்பதுதான் என் முதல் நோக்கம் என்கிறவரா என்பதைப் பார்த்துத் தேர்வுசெய்ய வேண்டும். சம்பளம், சலுகைகளைக் குறிவைத்து வருகிறவர், அது கிடைத்துவிட்டால், தெளிவாக செட்டில் ஆகிவிடுவார். அதோடு, வியாபார முன்னேற்றத்துக்கு அவரே வலுவான ஸ்பீடு பிரேக்கராகவும் மாறிவிடுவார்.
அடுத்த விஷயம், எதிர்காலக் கண்ணோட்டம்... திருப்தி அடையாமல் எல்லையை விரித்துக்கொண்டே போவது. திறமையான பிஸினஸ்மேனுக்கு தொழில் வாழ்க்கையில் திருப்தியே கிடைக்காது. அதேபோல, அவர்கள் யோசிக்கிற எண்கள் எல்லாம் எட்டாக்கனி உச்சத்தில்தான் இருக்கும். ஆனால், அப்படி யோசிக்கிற வர்களால் நிச்சயம் அதை எட்டிப்பிடித்துவிட முடியும்.
தன் முதலாளி கேட்டதும் தன்னை நம்பி ஒப்படைக் கப்பட்ட புதிய பொறுப்பை நிறைவேற்ற உடனே தயாராகிவிட்டார் மீரான். அவரது வேகம் பார்த்த முதலாளி, ‘உன் கையில் சேமிப்பாக இருக்கும் ஒரு தொகையை இதில் போடு... இந்திய நிறுவனத்தில் என்னை யும் பங்குதாரராக்கிச் செயல்படு!’ என்று மீரானுக்கு ஒரு தொழிலையே அமைத்துத் தந்துவிட்டார். அப்படி 20 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம், இன்று பல வளர்ச்சிகளைக் எட்டி உள்ளது.
மீரானின் வெற்றி ரகசியத்தைக் கேட்டேன். ‘ரகசியம் என்று நீங்கள் கேட்டாலும் வெற்றி ஃபார்முலா எப்போதுமே சிம்பிளானது. நாம் தொழிலுக்கு என்ன ஐடியாவைப் கொடுக்கிறோமோ அதற்கேற்ற லாபம் கொட்டும். என்னுடைய ஆரம்பகாலத்தில்கூட, தொழிலுக்கு முதலீடு என்று பெரிய தொகை போடவில்லை. நாங்கள் பயன்படுத்திய உத்திகள்தான் இந்த வளர்ச்சியைத் தந்துள்ளது.
விளம்பரம்தான் எங்கள் தொழிலின் வளர்ச்சிக்குக் காரணம். ‘ஒரு கிலோ மீட்டருக்கு எழுதலாம்...’ என்ற எங்களின் விளம்பரங்கள் ஆரம்பகட்டத்தில் இந்திய பேனா ரசிகர்களை ஈர்த்தது. முதல் 5 வருடங்கள் தொடர்ந்து விளம்பரங்களிலேயே பலரையும் உள்ளே இழுத்தோம். எங்கள் பேனாக்களை வாங்கியவர்கள், ‘இங்க் பேனாவை விட, இது வசதியாக இருக்கிறதே!’ என்று எங்கள் பக்கம் வந்தார்கள். ஜாம்பவான்களையும் பெரிய போட்டியாளர்களையும் சமாளித்து கால் ஊன்றினோம்.
இனியும் இறக்குமதி செய்யவேண்டாம் என்ற கட்டம் வந்தபோது, லண்டன் தலைமையகத்தாரின் உதவியுடன் இருங்காட்டுக் கோட்டையில் ஃபேக்டரி போட்டு பலருக்கும் வேலை வாய்ப்பு தந்தோம். பெண்பணியாளர்களுக்கு அதிக வாய்ப்பு தந்தோம்’ என்றவர், ‘எங்கள் சக்ஸஸுக்குக் காரணம் என்ன? என்று கேட்டால், ‘பார்ட்னர்கள்’ என்றுதான் சொல்வேன். ‘உனக்கு பிஸினஸ் வேண்டுமா... பார்ட்னர்கள் வேண்டுமா..?’ என்று யாராவது கேட்டால், பளிச்சென்று சொல்வேன், ‘பார்ட்னர்கள்தான்’ என்று. நல்ல பார்ட்னர்கள் கிடைத்தால் எந்த பிஸினஸிலும் ஜெயித்துவிட முடியும்’ என்ற மீரான், ‘புரஃபஷனலுக்கும் ஆன்ட்ரபெர்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா..? இருவரிடமும் ஒரு பொறுப்பைக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். புரஃபஷனல் அந்த வேலையை முடிக்க முடியவில்லை என்றால், அறையை விட்டு எழுந்து போய்விடுவார். ஆன்ட்ரபெர்னர் எழுந்து போகமாட்டார். ஜன்னல் வழியே குதித்துவிடுவார். அதாவது, தனக்கு அளிக்கப்பட்ட ப்ராஜெக்ட், தன் திறமைக்கு விடப்பட்ட சவால் என்றே எடுத்துக்கொள்வார். அதை முடிக்க முடியாவிட்டால் உயிர் வாழ்ந்து பயனே இல்லை! என்கிற அளவு ஒரு மூர்க்கத்தனம் அவனிடம் இருக்கும்’ என்பார். உண்மைதான் இது! தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அப்படி ஒரு வைராக்கியம் அவசியம் தேவை!
வெற்றியை அடையாளம் காண்பது நல்ல தொழிலதிபருக்கு இருக்கவேண்டிய கடமைகளுள் ஒன்று. சேல்ஸ் டீமும் அவர்கள் தந்த நெட்வொர்க்கும்தான் பலம் என்பதை உணர்ந்து, அவர்கள் மனம் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார் மீரான். சமீபத் தில் தனி விமானம் மூலம் தன் டீமை வெளிநாடுகள் சுற்றிப் பார்த்து வரவும் அனுமதித்துள்ளாராம்.
உங்கள் ஊழியரில் சிலர் உழைப்பாளி யாக இருக்கலாம். சிலர் யோசனைக் காரர்களாக இருக்கலாம். அந்நிலையில் ஐடியா சொல்கிற டீமைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால், அவர்கள் சொல்கிற திட்டங்களுக்கு உழைக்கும் டீமைப் பயன்படுத்தலாம். தொழில் வளர்ச்சியும் கும்மென்று இருக்கும்.
இந்த உலகத்தில் எல்லோருக்குமே இருப்பது 24 மணிநேரம்தான். அதை யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் மாத முடிவில் அவர்களது வருமானம் தீர்மானிக்கப் படுகிறது. நேரத்தைத் தெளிவாகத் திட்டமிட்டவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பது தெரிகிறதா..?
அதேபோல, நல்ல டீமை உருவாக்கு கிறவர்களுக்கு, டீம் லீடராகத் திகழ்பவர் களுக்கு அபரிமிதமான நேரம் கிடைக்கிறது. சிந்திக்க நேரம் நிறைய கிடைக்கிறது. தங்கள் வெற்றிப் படிகளை அவர்கள் செதுக்குவதன் பின்னணி இப்போது புரிகிறதா..?’
த ன் பிஸினஸ் வளர்ச்சியில் மீரான் பயன்படுத்திய திட்டங்கள், பாலிசிகள் பலருக்கும் சக்தி தருபவை. அதை அவருடைய வார்த்தைகளிலேயே தருகிறேன். ‘நீங்கள் இருக்கும் தொழில் துறையில் சாதித்த நபரை, உங்களை வசீகரித்த நபரை, ரோல் மாடலாக்கிக் கொள்ளுங்கள். இவரைப் போல சாதிப்பேன்’ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.
உங்கள் பணியாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுங்கள். சம்பளத்துக்கு வேலை செய்கிற உணர்வே அவர்களுக்கு வரக்கூடாது. ‘இது தங்கள் பிஸினஸ். தாங்களே முதலாளி...’ என்ற எண்ணத்துடன் அவர்கள் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றும் போதுதான் நேரங்காலம் பார்க்காமல் களைப்பின்றி, உற்சாகமாக, சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார்கள். நிர்வாகத்தில் நடக்கும் அநாவசியச் செலவுகள், தவறுகள், லாபத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.
இப்படிப்பட்ட உழைப்பாளியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டின் இன்றைய தேவையே, அவரைப் போன்ற கடுமையான, உரிமையான உழைப்பாளி கள்தான். அவரைக் கண்டுபிடித்ததுதான் உங்கள் சக்ஸஸ்! அந்த ஊழியர் தரும் புதிய ஐடியாக்களை அமல்படுத்திப் பாருங்கள். அவரது பணிவும் இன்வால்வ்மென்ட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறதா..? என்பதை மட்டும் நீங்கள் கண்காணித்து வந்தால் போதும்.
மார்க்கெட்டிங் பாகத்தில், தேவைதான் அந்தத் தொழிலை நடத்துகிறவருக்கு தேவதை. தேவை என்னும் தேவதையின் கடைக்கண் பார்வை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு பிஸினஸ் வளர்ச்சியும் இருக்கும். எனவே, உங்கள் யோசனை களையும் சிந்தனைகளையும் அந்தப் பாதையில் திருப்பும்போது தொழில் வளர்ச்சி கிடுகிடுவென இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும். எனக்கு நன்றாக டீ போடத் தெரிந்த ஒருவர் தேவை. ருசியை விரும்புகிற என் அலுவலகத்துக்கு அப்படி ஒருவரைத் தேடுகிறேன். இது பரவலாகும்போது அந்தத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு பெரிய லாபம் காத்திருப்பதாக அர்த்தம். எனக்குத் தெரிந்து இன்று தேவை அதிகமுள்ள ஏரியா, ஷூ தயாரிப்பு.
ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், வியாபாரத்தில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ‘அவர் நல்லவர்... நாணயமானவர்’ என்ற சிலரது வாய் வார்த்தைகள் அவருக்கே தெரியாமல் அவரது பிஸினஸை வளர்த்துவிடும் என்பது என் அனுபவ உண்மை.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 

பிஸினஸ் என் காதலி! 
பி ஸினஸில் ஜெயிக்கவேண்டும் என்பது மட்டும் மனதில் இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.
சென்ற வாரம் என் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மிடில் கிளாஸ் நண்பர் அவர். காலிங் பெல் ஒலிக்க... வாசலில் ஒருவர். கை நிறைய புத்தகங்கள். சர்வே எடுக்கிற மாதிரி பேச்சை ஆரம்பித்தார். ‘‘மாசம் எவ்வளவு ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்குவீங்க... ஜவுளிக்கு ஒதுக்குகிற தொகை... நகை வாங்கும் ஐடியா இருக்கிறதா..?’’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டார்.
‘‘உங்களுக்கு என்ன வேணும்... இதெல்லாம் எதுக்குக் கேட்கறீங்க?’’ என்று நண்பர் கேட்டார். ‘‘நீங்கள் அடிக்கடி பொருள் வாங்கும் பிரபலமான கடைகளோட தள்ளுபடி கூப்பன்கள் உள்ள புக்தான் இது! ஒரு கடைக்கு ரெண்டு, மூணு கூப்பன் இருக்கு. 3 மாசம் வரை இதைப் பயன்படுத்திக்கலாம். உதாரணத்துக்கு, நீங்க மாசம் 2,000 ரூபாய்க்கு மளிகை சாமான் வாங்கறதா வெச்சுக்கிட்டாலும் 10 % தள்ளுபடியா 200 ரூபாய் கிடைக்கும்!’’ என்றார்.
நண்பர் ஆர்வமாகிவிட்டார். ‘‘இந்த புக் ஃப்ரீயா?’’
‘‘இல்லே சார்! 50 ரூபாய். ஆனா, உங்களுக்கு குறைந்தபட்சம் 1,500 ரூபாய் லாபம் தர்ற கூப்பன்கள் இதிலே இருக்கு!’’
நண்பர் வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அவர் பொருட்கள் வாங்கும் கடைகள் பரவலாகத் தெரிந்தன. உடனே 50 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார். புத்தக ஆசாமி அடுத்த வீட்டு காலிங் பெல்லை அடிக்கிற சத்தம் கேட்டது.
யோசித்துப் பாருங்கள். வீடு, வீடாக இப்படி கேன்வாஸ் செய்கிற நபர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தள்ளுபடி கூப்பன் அனுமதி பெற அணுகும்போது என்ன சொல்லி இருப்பார்..? ‘என்னிடம் 50,000 வாடிக்கையாளர் கொண்ட நெட்வொர்க் இருக்கிறது. அவர்களை உங்கள் கடையில் பொருள் வாங்க வைக்கிறேன். இதற்காக எனக்கு நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம். வருகிற கஸ்டமர்களுக்கு நீங்கள் சிறப்புச் சலுகை தந்தாலே போதும்!’’ என்று கோரிக்கை வைத்திருப்பார்.
புதிய வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரருக்கு கசக்கவா போகிறது..? இதனால், அவருக்குக் கைப்பொருள் இழப்பு ஏதுமில்லை! தன்னால் முடிந்த தள்ளுபடியைச் சொல்லிவிடப் போகிறார். இப்படித்தான் அந்தத் தள்ளுபடி கூப்பன் புத்தகம் தயாராகி இருக்கும்.
சில பிரபல போன் நிறுவனங்கள், கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரைக் கவர, இதே ஸ்டைல் கிஃப்ட் வவுச்சர்களைக் கொடுப்பதுண்டு. அது பெரிய லெவல். மக்களுக்குப் பயன்படும் இதுபோன்ற சாதாரணக் கடைகளைக் குறிவைத்துச் செயல்பட்டால் சின்ன ஐடியாவில் பெரிய லாபம் கிடைக்கும்!
3 மாதத்துக்கு 10,000 கூப்பன் புத்தகங்களை விற்க ஒருவரால் முடியும். பெரிய செலவு என்று பார்த்தால், கடைக்காரர்களிடம் பேச அலைந்ததில் உண்டான செலவும் கூப்பன் புத்தகம் அடித்த செலவும்தான். அடித்த புத்தகங் களை கமிஷன் அடிப்படையில் ஆள் வைத்தும் விற்பனை செய்யமுடியும். மூன்றே மாதத்தில் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குறையாமல் டர்ன் ஓவர் பார்த்துவிட முடியுமே!
கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகன விற்பனை என உங்கள் பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் இந்த கூப்பன் ஐடியாவை முயற்சித்துப் பார்க்கலாமே! மூலதனம் இல்லாமல் ஐடியாவை வைத்து பண்ணும் இதுபோன்ற தொழிலில் நேர்மை, ஆட்களை வைத்து வேலை வாங்கும் திறமை, வாடிக்கையாளர் நம்பிக்கை இதெல்லாம் மிக முக்கியம்.
சமூகத்தை, சுற்றுப்புறத்தை வைத்து காசு பண்ணும் இந்த வித்தையில் ஜெயித்த வர்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் இதோ இந்தப் படத்தில் என்னுடன் இருக்கிறார்.
மூளையைப் பயன்படுத்துவதில் கோவைக் காரர்கள் எப்போதுமே கெட்டிதான். சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று கோவையைத் தாண்டி சென்னைவரை பல கிளைகள் விரித்து வியாபித்திருக்கின்றன. அதன் உரிமையாளர் மகாதேவ ஐயரிடம் கற்ற வித்தையை அவருடைய இரு மகன்கள் கிருஷ்ணனும், முரளியும் அசத்தலாகச் செயல்படுத்துகிறார்கள்.
‘நண்பர்கள் கைதூக்கி விட்டதுதான் எங்கள் மூலதனம். அவர்களின் வாய்வழித் தகவலாலேயே வளர்ந்தவர்கள் நாங்கள்’ என்பார் முரளி.
எங்கெல்லாம் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கெல்லாம் இருக்கிற இனிப்புத் தொழில் பண்ணுகிற முரளி, இன்றைக்கும் சொல்வது, ‘பேங்க் பேலன்ஸ் முக்கியமே இல்லை. தயாரிக்கிற பொருளோட தரம் நல்லபடியா இருக்கா?ன்றதுதான் முக்கியம்’ என்பார். அந்த அளவுக்கு அவருடைய தந்தை, ‘தப்பு வந்துடக் கூடாது. தப்பு வந்தா நம்பிக்கை போய்டும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்.
ஒருமுறை இனிப்பு பூந்தி போட்டுக் கொண்டிருந்தார் சமையலறை ஊழியர். அந்தக் கரண்டி, காராபூந்தி போடப் பயன்படுவது. இரண்டுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை என்றாலும், அது நெய்யில் மட்டுமே விழுந்து எழும். காராபூந்தி கரண்டி எண்ணெயில் போட்டு எடுப்பது. அதுவரை இரண்டு டின் நெய் செலவில் சில கிலோக்கள் தயாராகி இருந்தது பூந்தி. கவலையோடு அந்த ஊழியரைப் பார்த்தாராம் முரளியின் அப்பா.
‘கொட்டிடு... எல்லாத்தையும் கொல்லையிலே கொட்டிடு!’ என்று மட்டும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் காலி செய்திருக்கிறார். ‘என்னதான் நெய்யில் சுட்டாலும், காராபூந்தி கரண்டியின் எண்ணெய் வாசம் ஒட்டிவிட்டால், வாடிக்கையாளர் நம்பிக்கை போய்விடுமே’ என்ற கவலை! எவ்வளவு நஷ்டம் வந்தாலும் தாங்கத் தயாராக இருந்த அந்த மனசுதான், அவரது நிறுவனத்தை இத்தனை தூரம் வளர்த்து விட்டிருக்கிறது. இன்றும்கூட, ஒவ்வொரு கிச்சனின் பின்புறமும் ஒரு குழி இருக்கிறதாம்.
செய்யும் வேலை என்பது தவம் மாதிரி என்று இருக்கிற இவர் போன்றவர்களால்தான் நினைத்த இலக்கை எட்டமுடியும். பிஸினஸ் சிறியதா, பெரியதா என்பதைப் பார்த்து முடிவு செய்கிற விஷயமல்ல இது. வியாபாரம் என்பது காதலி மாதிரி. அதை எனக்கே எனக்கானது என்று விட்டுக் கொடுக்காத உரிமையோடு அன்பாகப் பார்த்தால், அது நம்மை உயரே, உயரே கொண்டு போகும். இதற்கு அடிப்படை, தெளிவான திட்டமிடுதல்தான். நம் இலக்கு இது... அதைத் தொட நாம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் இவை என்பதில் நாம் எப்போதுமே படு தெளிவாக இருக்கவேண்டும். முரளியும் சென்னை வந்தபோது அதைத்தான் செய்தார்.
‘1996-ல் சென்னையில் கடை ஆரம்பித்தபோது, இவ்வளவு பெரிய ஊரில் எப்படி நம் தயாரிப்பைத் தனித்து தெரிய வைப்பது என்ற குழப்பமும் பயமும் வந்தது. தயாரிப்புச் செலவைவிட, விளம்பரத்துக்கு அதிகம் செலவழிப்பதுதான் சரி என்று தோன்ற, மக்களை ஈர்க்கும் விதமாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால், அரைக்கிலோ இலவசம் என்று அறிவித்தோம். அது நன்றாக ஒர்க் அவுட் ஆனது. அந்த வெற்றி ஃபார்முலாவை ஒவ்வொரு புது பிராஞ்சின் போதும் இன்றும் பின்பற்றுகிறோம். சமீபத்தில் பெட்ரோல் பங்கில் ஒரு பிராஞ்ச் தொடங்கியபோது இதையே வேறு விதமாக்கி, ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால், இரண்டு லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ என்று அறிவித்தோம். நல்ல வரவேற்பு இருந்தது’ என்று சொல்கிறார் முரளி.
இதுவும் ஒருவகையான நீண்டகால வாடிக்கையாளர் ஈர்ப்பு டெக்னிக்தான். சாம்ப்ளிங் என்பதும் ஒருவகை முதலீட்டுச் செலவுதானே! இன்று சென்னையில் மட்டுமே 15 கிளைகள் திறக்கிற அளவு இனிப்பால் ஈர்த்திருக்கிறார் முரளி.
தங்களை வாழவைத்த இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வருடம் முழுக்க பல விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார் முரளி. அங்கு வருகிற மக்களெல்லாம் இதை நடத்துகிற ‘கிருஷ்ணா’வை வாயார வாழ்த்தும்போது பரவும் பெயர் தனி பப்ளிசிட்டி. பாட்டில் சைஸில் இருக்கிற தொழிலை, அண்டா அளவுக்கு மாற்றும் வித்தை இதுதான்.
பிள்ளையார், என் பிஸினஸ் குரு!
மு ரளி ஒரு விநாயகர் ரசிகர். சின்னதும் பெரியதுமாக அவரது அறை முழுக்க 2,500 சிலைகள் வரை சேர்த்து வைத்திருக்கிறார். ‘விநாயகரோட குணம் ஒவ்வொரு பிஸினஸ் மேனுக்கும் இருந்தால் எங்கேயோ போய் விடலாம்!’ என்று ஜாலியாகச் சொன்ன முரளி, அதுபற்றி விளக்கவும் ஆரம்பித்தார்.
‘‘விநாயகர் ரொம்ப சமத்து. உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் ‘ஆவா கயாமி’ன்னு சொல்லி மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்குவார். பூஜைகளைப் பண்ணி, கோரிக்கை வெச்சு, கொழுக் கட்டை தந்தா சமத்தா சாப்பிட்டுட்டு ‘யதாஸ்தானம்’னு சொன்னவுடனே கிளம்பிப் போய்டுவார். நாம் நினைக்கிற வடிவத்திலே உருவத்திலே அவரைப் பார்க்க முடியும். இப்படியான எளிமையான முதலாளி அவர்.
அவரைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. நூறடிக்கு ஒரு கோயில்ல இவரைப் பார்க்க முடியும். ‘பார்ட்டிக்கு செக் கொடுத்திருக்கேன். பார்த்துக்கோப்பா!’னு வேண்டுதலை வெச்சுட்டுப் போய்ட்டே இருக்கலாம். இந்தச் சுலபமான சந்திப்புதான் பிஸினஸ் மேனுக்குத் தேவைப்படற பலம்.
வியாபாரிக்கு ஞாபக சக்தி ரொம்ப அவசியம். அது விநாயகருக்கு உண்டு. அவர் அவதாரமான யானையின் நினைவு சக்திக்கு ஈடு இணை ஏது..? அவர் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்.
பொறுமை முக்கியம். நாலு வயசுப் பையன் ‘உட்காரு!’னு உத்தரவு போட்டாலும் யானை உடனே கீழ்ப்படியும். பத்துப் பேரைத் தூக்கிப் போட்டு பந்தாடற சக்தி உள்ள யானைக்கு இருக்கிற அந்தப் பொறுமை, சகிப்புத் தன்மை... வியாபாரிக்கு அவசியம்.
கம்பீரம்தான் முதலாளிக்கு அழகு. எத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிறந்த பிஸினஸ்மேன் தனியா தெரிவார். ஒரு நடையிலே, அந்த ஸ்டைலிலே அது வெளிப்பட்டு விடும். விநாயகர் (யானை)கிட்டே அந்த ஸ்டைலைப் பார்க்க முடியும்.
பாசம். கூட இருக்கிறவங்களை அணுசரிச்சு, அரவணைச்சுப் போற அந்த அன்பு, விநாயகர் கண்ணைப் பார்த்தீங்கன்னா தெரியும். சின்னக் கண்ணிலே அம்மாவோட பாசத்தைச் சொல்ற அற்புதம் அவர்கிட்டேதான் இருக்கு!’’ - தன் குரு பற்றி சிலாகித்துச் சொல்கிறார் முரளி.