Monday 22 July 2013

கிளாஸ் பெயின்டிங் தொழில், | Glass Painting in Tamil

லாபக் கண்ணாடி!
தொழில்

லாபக் கண்ணாடி!
ம க்களின் ரசனை ரொம்பவே மாறிவிட்டது. தங்கள் வீடுகளை அலங்கரிக்கவும், மற்றவர்களுக்குக் கொடுக்க வித்தியாசமான பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்ணாடியில் வரையப்படும் ஓவியங்களை மிக ரசித்து வாங்குகிறார்கள். அதற்காக ஆகும் செலவுப் பணத்தைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. அதனால், கொஞ்சம் விரல் வளைத்து வேலை செய்யத் தெரிந்திருந்தால் போதும். கண்ணாடியில் கலைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து பணம் பார்க்கலாம்.
கலைப் பொருள் என்றாலே பெரிய அளவில் ஓவியத்திறமை வேண்டுமே என்று யோசிக்க வேண்டாம். கண்ணாடியின் கீழே ஓவியங்களை வைத்து அப்படியே டிரேஸ் எடுக்கவேண்டியது தான், வேலை... அதனால் குறைந்தபட்ச திறமைகள் இருந்தால் போதும். நல்ல ஓவியத் திறமை இருந்தால் இன்னும் சம்பாதிக்கலாம்.
இந்தத் தொழிலைத் தொடங்க பெரிய அளவில் முதலீடு ஏதும் தேவையில்லை. இடம் பார்த்து அலையவேண்டியது இல்லை. வீட்டில் வைத்தேகூட தாராளமாகச் செய்யலாம்.
கண்ணாடி பீஸ்கள் எல்லா ஊரிலும் கிடைக்கும். பெரிய சைஸில் கண்ணாடி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த சைஸ் படத்தை டிரேஸ் அவுட் எடுக்கப் போகிறோமோ, அந்த அளவுக்கு கண்ணாடியைக் கட் பண்ணி தனியாக எடுத்துக் கொள்ளலாம். பலதரப்பட்ட அளவுகளில் கண்ணாடிகள் கிடைக்கின் றன. ஆனால், இதுபோல பெரிய சைஸ் கண்ணாடியை வாங்கி, தேவைக்கு ஏற்ப கட் செய்து செலவை மிச்சப்படுத்தலாம். கண்ணாடி கட் செய்யும் ஊசி வாங்க வேண்டி இருக்கும்.
அடுத்ததாக, படங்களை டிரேஸ் எடுப்பதற்குத் தேவையான பேப்பர்கள், கிளாஸ் பெயின்டிங் கலர் பேனாக்கள், பெயின்ட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஓவியத்தை கண்ணாடியில் வரைய வேண்டுமோ அதை முதலில் டிரேஸ் பேப்பரில் அவுட்லைனாக அச்சு எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி அச்செடுத்த டிரேஸ் பேப்பரை, தேவைக்கு ஏற்ப சுருக்கியோ அல்லது பெரிதாக்கியோ ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சைஸில் படம் இருந்தால் போதும் என்றால் டிரேஸ் பேப்பரையே பயன்படுத்தலாம். ‘ஒரிஜினல் படத்தையே கண்ணாடிக்கு அடியில் வைத்து வரையலாமே!’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படி வரையும் போது, சில சிறிய கோடுகள் சரியாக வராது.
அச்சு தெளிவாகவும் அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். கை நிறைய காசும் வரும்.
அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரை, அளவாக வெட்டப் பட்ட கண்ணாடியின் பின்புறம் ஒட்டி வைக்கவேண்டும். அதன் பிறகு, அந்த அவுட்லைனை கண்ணாடியில் டிராயிங் பேனாவால் வரையவேண்டும். அதன் பிறகு, தேவைக்கு ஏற்ப கிளாஸ் பெயின்ட்களைப் பயன் படுத்தி ஓவியத்துக்கு வண்ணம் சேர்த்தால் கண்ணாடி ஓவியம் ரெடி!
5 X 4 இன்ச் கண்ணாடியின் விலை மூன்று ரூபாய்தான். டிரேஸ் பேப்பர், பெயின்ட் செலவு போன்றவை இரண்டு ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, மூன்று மடங்கு லாபம் வைத்து 20 ரூபாய்க்கு விற்கலாம். அந்த மூன்று மடங்கு லாபம் என்பது உழைப்புக்குக் கிடைப்பது! டிரேஸ் எடுக்கும் பேப்பர், பேனா, பெயின்ட் எல்லாமே ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கக் கூடியவைதான்.
கடவுள் படங்கள் இப்போது நன்றாக விற்பனையாகின்றன. அதேபோல இயற்கைக் காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை ஒருமுறை டிரேஸ் எடுத்து வைத்துக்கொண்டால், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘படம் வரையத் தெரிந்துவிட்டது. ஆனால், நம்மைத் தேடி வந்து வாங்குபவர்கள் யார்?’ என்ற கேள்வி எழலாம். முதலில் கைக்காசைப் போட்டு சில ஓவியங்களை ரெடிசெய்து கிஃப்ட் விற்பனை செய்யும் கடைகளில் கொடுத்து வைக்கவேண்டும். அதைப்பார்த்துவிட்டு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு வரைந்து கொடுக்கலாம். அல்லது கிஃப்ட் சென்டருக்கே விலை வைத்துக் கொடுக்கலாம்.
இதைவிட முக்கியமாக, போன் நம்பர் கொண்ட விசிட்டிங் கார்ட் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை முக்கியமான கடைகளில் கொடுத்து வைத்தால், நல்ல வாய்ப்புகள் வரும்போது தகவல் பெற்று படங்களை வரைந்து கொடுக்கலாம்.
வாடிக்கையாளர்களில் 90% பெண்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை உருவாக்கவேண்டும். வெறுமே படம் வரைந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஃபிரேம் செய்தும் கொடுத்தால் அதில் கூடுதலாக வருமானம் கிடைக்கும். ஃபிரேம் செய்த 30ஙீ18 இன்ச் படங்களை அதிகபட்சம் 4,000 ரூபாய்வரை கூட விற்கமுடியும். ஏனென்றால், இதில் கலைக்குதான் மரியாதை!
அக்கம்பக்கத்து ஊர்களாக இருந்தாலும் ஆர்டர் எடுத்து தெர்மாகோலில் வைத்து பேக் செய்து கூரியரில்கூட அனுப்பலாம். இவ்வளவு ஏன், தொழில் சூடு பிடித்துவிட்டால், வெளிநாட்டு ஆர்டர்களைக்கூட எடுத்துச் செய்யலாம்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

தொழில்

‘மூளை’தனம்
லேட்டஸ்ட் வியாபார உத்திகள்!
உ ங்கள் மகளை என் பையனுக்கு திருமணம் செய்து தருவீர்களா..?’ என்று கேட்டார் அவர். ‘நோ சான்ஸ்..!’ என்று தீர்க்கமாக மறுத்தார் பில்கேட்ஸ். அந்த மனிதர் விடவில்லை. ‘ஒருவேளை என் மகன் உலக வங்கியில் துணைத் தலைவர் பதவியில் இருந்தால்..?’ என்று கேட்க... பில்கேட்ஸ் கண்களில் சிறிய ஆச்சர்யம். ‘அப்படியானால் ஒப்புக்கொள்ள வாய்ப்பிருக்கிறது!’ என்ற பில்கேட்ஸ் யோசனையோடு நகர்ந்தார். அந்த மனிதருக்கு மகிழ்ச்சி.
அடுத்த ஓரிரு நாள். உலக வங்கியின் தலைவரைச் சந்தித்தார் அந்த மனிதர். ‘என் மகனுக்கு உலக வங்கியில் துணைத் தலைவர் பதவி தரமுடியுமா..?’ என்று எடுத்த எடுப்பிலேயே படாரெனக் கேட்டார். வங்கித் தலைவர் முகத்தில் ஆயிரம் கேள்விக் குறிகள். ‘துணைத் தலைவர் பதவி என்ன அத்தனை சாதாரணமா..?’ - கோபம் கொப்பளித்தது வங்கித் தலைவருடைய முகத்தில். தொடர்ந்த அவரே, ‘உங்கள் மகன் இப்போது என்னவாக இருக்கிறார்..?’ என்றார்.
‘சும்மாதான் இருக்கிறார். ஆனால், பில்கேட்ஸின் மருமகனாகப் போகிறார்!’ என்றார் கூலாக.
வங்கித் தலைவர் முகத்தில் வானவில் மாற்றங்கள். ‘பில்கேட்ஸே சும்மா இருக்கிற ஒருவரை மாப்பிள்ளை ஆக்க முயற்சி செய்கிறார் என்றால் உங்கள் மகனிடம் அதீத திறமை ஏதோ ஒளிந்திருக்கவேண்டும். அதுபோக, உலகமே கவனிக்கும் ஒருவரின் மாப்பிள்ளை எங்களிடம் வேலை பார்ப்பது எங்களுக்கும் பல பெரிய மனிதர்களின் தொடர்பை உண்டாக்கித் தரும். அது வங்கிக்கு லாபம்தான். உங்கள் மகனை உடனே விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்!’ என்றார் கனிவும் அன்பும் கலந்த குரலில்.
சும்மா இருந்த மகனுக்கு பிரமாதமான வேலை வாங்கித் தந்த அந்த அப்பா, உலகக் கோடீஸ்வரரை சம்பந்தியாக்கிய திறமையில் அவரது மூலதனம் என்ன..? மூளைதானே! சும்மா ஜாலிக்காக சொல்லப் படும் இப்படி ஒரு கதை நெட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. லாஜிக் இல்லாத உதாரணம் என்றாலும் இதிலும் நமக்குக் கிடைக்கிறதே ஒரு வேடிக்கையான பிஸினஸ் வெற்றி! நாம் அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எப்படியோ தட்டுத் தடுமாறி தொழில் தொடங்கி விட்டீர்கள்! அந்தத் தொழிலில் நிற்பது, காலூன்றுவது எப்படி... தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை..?
இரண்டே விஷயங்களைச் சொல்லலாம். புத்திசாலித்தனமான பொறுமை, வாடிக்கையாளர் திருப்தி.
முதலாவது நம் கேரக்டர் சார்ந்த விஷயம். வாடிக்கை யாளர் சொல்லும் குறைகளைக் கவனமாகக் கேட்டு, அதைச் சரிசெய்வது! அண்மையில் மதுரை சென்று அங்கே அறை எடுத்துத் தங்கி வந்த ஒரு நண்பர் என்னிடம் பெரிதாகக் குறைபட்டுக்கொண்டார். ‘தன் ஓட்டலை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்று அழகழகான திரைச்சீலை, மெகா சைஸ் டி.வி வசதியான சில சோபாக்கள், நல்ல ஏ.ஸி எல்லாம் போட்டிருக்கிறார். மேற்கத்திய கலாசார மோகத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக வெஸ்டர்ன் டாய்லெட் கட்டி இருக்கிறார். ஆனால், அந்த டாய்லெட்டின் மேற்புறத்தை துடைத்துவிட்டு அமர டிஷ்யூ பேப்பருக்கான ஏற்பாடு ஏதுமே செய்யவில்லை. ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தும் அசூசையோடு தங்கி இருந்தேன். ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நானே வாங்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. வெஸ்டர்ன் டாய்லெட் வைக்கத் தெரிந்தவருக்கு, அதை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் வைக்கத் தெரியாததால் இப்படி ஒரு பிரச்னை. அதேபோல, பால்கனி கதவின் தாழ்ப்பாள் சரியாக லாக் ஆகவில்லை. மிகச் சிரமப்பட்டு முயற்சித்து லாக் போடவேண்டி இருந்தது. ஒருமுறை திறந்துவிட்டு, மூட சிரமப்பட்டதால் அந்த பால்கனியையே திறக்கவில்லை. இருக்கிற வசதியைப் பயன்படுத்தமுடியவில்லை!’ என்று அறை மேலாளரிடம் புகார் செய்தேன். ‘ம்ம்... பார்க்கச் சொல்கிறேன்!’ என்றார் அவர். அந்தப் பிரச்னை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை வரவில்லை. இனி அங்கே தங்கமாட்டேன் நான்!’ என்றார்.
இது எங்குமே நடக்கும். ஒரு வாடிக்கையாளர் உங்களுக்குத் தெரியாமலே கழன்று போவது இப்படித்தான். என்ன நடந்தது என்று அவராகவே சொல்லும் போதாவது நடவடிக்கை எடுத்தாலோ, அல்லது ‘மன்னிக்க வேண்டும்... உடனே பார்த்து சரி செய்கிறேன். அடுத்தமுறை நீங்கள் வரும் போது பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!’ என்று ஆறுதலாகச் சொல்லி இருந்தாலோ நண்பர் எவ்வளவு மகிழ்ந்திருப்பார். இதற்காகவே அடுத்த முறை ஆர்வமாக அந்த ஓட்டலுக்குப் போவார் இல்லையா..? இந்த அணுகுமுறை கொண்ட நிறுவனங்கள்தான் தொடர்ந்து மேலேறிச் சென்றுகொண்டே இருக்கின்றன.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற பண்பான, சேவை மனப்பான்மை குணங்களும் மிக முக்கிய காரணம். மதிப்பவரைத் தேடித்தான் வாடிக்கையாளர்கள் வந்து குவிவார்கள். காசு கொடுத்து நம் பொருளை, சேவையை அனுபவிக் கும்போது, வெவ்வேறு குணம் கொண்ட வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் 100 குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். அதைப் பொறுமை யுடன் களைந்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதுடன் அந்தவகை பிரச்னை அதன்பிறகு வராதபடி பார்த்துக்கொள்ளும் புத்திசாலித்தனம் ஒருவகை.
அடுத்த வகை, இதற்கு அடுத்த கட்டம். வாடிக்கையாளரே திகைக்கும் அளவுக்கு திருப்தி தருவது! நம் சேவையில் மயங்கி நம்மிடமே முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட வைப்பதுதான் அது. முடி வெட்டப் போகிற இடத்தில் கண்மூடி ஒத்துழைப்புக் கொடுப்பது நம்மில் பலரும் செய்வது. அப்படியான இடங்களில் இனிய இசையைத் தவழவிடுவது... காய்கறி வாங்க வரும் இடத்தில் இது உங்கள் அன்புக்குரிய இடம் என்பதைச் சிம்பாலிக்காக உணர்த்த ஒரு மீன் தொட்டியை வைப்பது... வீடு கட்டும் கான்ட்ராக்டர் வேலை முடித்தபின், தன் சொந்த செலவில் வெளி அலங்கார விளக்குகளைப் போட்டுத் தருவது... ரெகுலர் கஸ்டமர்களாக வருபவர்கள் ஆர்டர் செய்யாத அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு டிஷ்ஷை அன்பளிப்பாக தந்து அசத்துவது... காரை சர்வீஸ் விட வருபவருக்கு, அன்றைய பயன்பாட்டுக்கு வாடகை கார் தருவது... தான் விற்ற பொருளில் ஒரு குறை கண்டுபிடித்து வாடிக்கையாளர் கோபத்துடன் திருப்பித் தர வரும்போது, அவருக்குப் பொருளை மாற்றித் தருவதோடு, ‘இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி சரி செய்யத் தூண்டியதன் மூலம் பல வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க உதவினீர்கள்!’ என்று சொல்லி, சிறு அன்பளிப்பு தந்து அவரை நெகிழ வைப்பது... என்பதெல்லாம் அந்த வாடிக்கையாளரை நம்மிடமே தொடர்ந்து தக்கவைக்கும் சில உதாரணங்களாகச் சொல்லலாம்.
சென்னையில் இருக்கிற சத்யம் தியேட்டருக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ரயில்வே ரிசர்வேஷன் போல எந்த கவுன்ட்டரிலும் எந்த தியேட்டருக்குரிய டிக்கெட்டையும் எடுக்கலாம் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் வசதியையே பலரும் ரசிக்கையில், இன்டர்நெட்டில் டிக்கெட் எடுக்க வாய்ப்பு தந்திருக்கிறார்கள். எந்தப் படத்துக்கு எவ்வளவு இடவசதி உள்ளது... என்ற வெளிப்படையான தகவல்கள் ஒருபக்கம், நமக்குத் தேவையான இருக்கைகளை நாமே தேர்வு செய்துகொள்வதோடு, இடைவேளையில் நாம் என்ன சிறு உணவு சாப்பிடப் போகிறோம் என்று தீர்மானித்திருந்தால், அதையும் டிக்கெட்டுடனே நாம் ஆர்டர் செய்ய முடிகிறது.
இடைவேளையின்போது, அந்த ஸ்நாக்ஸ் நம் இருக்கைக்கே தேடிவருகின்றன. எத்தனை சொகுசு பாருங்கள். கூட்டத்தில் இடிபட வேண்டியதில்லை. ‘ரெண்டு பஃப்ஸ்!’ என்று காசை நீட்டிய படி கத்தி, தாமதமாகும்போது எரிச்சலடைய வேண்டியதில்லை என்ற வசதி நமக்கு. இன்று இவ்வளவு ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ் நிச்சயமாக விற்கும் என்ற உறுதி தியேட்டர்காரர்களுக்கு. டிஜிட்டல் துல்லிய ஒலி அமைப்பு, அகலமான மெத்தென்ற இருக்கைகள், உடலை உறுத்தாத ஜில் குளிர், தரமான படங்கள் என்பதுதான் தியேட்டருக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய வாடிக்கையாளர் திருப்தி. ஆனால், இங்கே அதையும் தாண்டிப் போகும்போது, ஒரு வாடிக்கையாளரிடம் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை யோசித்துப் பாருங்கள். ‘பார்த்தா, சத்யத்திலே படம் பார்க்கணும்பா!’ என்பார்களே, அதுதான் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி!
இதோடு அவர்கள் நிற்கவில்லை. புதுமணத் தம்பதியருக்கு, இரட்டை இருக்கை வசதி... குழந்தைகளோடு வந்தால் அவர்களை தியேட்டர் பெண் ஊழியர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு நிம்மதியாகப் படம் பார்க்கச் செல்ல வசதியாக தனி விளையாட்டு அறை... 6 தியேட்டர்கள் காம்ப்ளெக்ஸில் அதிக பட்சம் 15 படங்களுக்கு மேல் ஒரே நாளில் திரையிடும் தெளிவான திட்டம், மேல்தட்டுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் படங்களின் தேர்வு என்று வாடிக்கையாளர் திருப்திக்குள்ளும் இருக்கிறது பிஸினஸ் தெளிவு. ஒரு சிறிய விஷயம், ஒரு தியேட்டரின் முகப்பை அலங்கரிக்க, ஏக செலவு செய்யவேண்டி இருக்கும். அங்கே பிரமாண்ட ஹோர்டிங் வைத்து வருமானம் பார்க்கிற சத்யம் தியேட்டர், உள்ளே தன் சொந்த செலவில், ‘சூப்பர் மேன்’ கட்-அவுட், ‘நார்னியா’ படம் வந்தபோது குழந்தைகளை ஈர்க்க, பனி பொழியும் காட்டு அட்மாஸ்பியர் என்று கலக்கி இருந்தார்கள். எங்கே எதைச் செய்யவேண்டும் என்ற சிந்தனை தானே இதற்குக் காரணம்...
வெவ்வேறு கலவையான ஆடியன்ஸையும் ஒவ்வொரு இடத்தில் திகைத்து மகிழவைக்கும் அவர்களது வெற்றி ரகசியம் இன்னும் தொடர்கிறது.
குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விட்டால், ஒரு பாஸ் தருகிறார்கள். அதைக்காட்டி குறிப்பிட்ட காலத்துக்கு நான் ஸ்டாப்பாக எத்தனை படம், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கமுடியும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘6 டிகிரி’ தியேட்டரில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வசதியாக, கிட்டத் தட்ட வீட்டுச்சூழலில் சரிந்து அமர்ந்து படம் பார்க்கும் பாக்ஸை உருவாக்கி உள்ளனர். இவை எல்லாம் சற்று கூடுதல் கட்டணத்தோடு கிடைத்தாலும், நாம் அடைகிற மன மகிழ்ச்சியில் பெரிதாகத் தெரியாது. பொழுது போக்க வேண்டும் என்று வந்துவிட்டால் அதை முழுதாக அனுபவிக்கட்டுமே! என்ற சத்யத்தின் முயற்சி சிலிர்க்க வைக்கிறது. படம் போகவேண்டும் என்ற சிந்தனை வந்தவுடனே, ‘சத்யத்தில் அந்த படம் ஓடுகிறதா..?’ என்றுதானே பார்க்கத் தூண்டுகிறது. அதுதான் திகைக்க வைக்கும் திருப்தி!

ஃபெமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!

ஃபெமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!
தொழில்
 
ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்...
ஃபேமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!
‘‘ரா த்திரி, பகலாகக் கிடந்து பிஸினஸில் நான் படும் கஷ்டம் என்னோடு போகட்டும். எனக்குப் பிறகு நீ இந்தத் தொழிலுக்கு வரவேண்டாம். நல்ல வேலையைத் தேடிக்கொள்...’’ என்று சொல்லும் தந்தைகள் இப்போது மாறிவிட்டனர்.
உலகம் முழுக்கவே இருக்கிற தொழில்களில் ஃபேமிலி பிஸினஸ் என்பது முக்கால் பாகம் வரை இருக்கிறது. இந்தியாவிலும் குடும்பத் தொழில் என்பது காலங்காலமாக இருந்துவருகிறது. அதில் பல நன்மைகள்... சில சங்கடங்கள்.
ஆனாலும், ‘‘ஃபேமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்!’’ என்று குடும்ப உறுப்பினர்களின் கூட்டு முயற்சிக்கு ‘ஜே’ போடுகிறார்கள் இவர்கள். அப்படி வெற்றிகரமாக தொழில் நடத்தும் சிலரைச் சந்தித்தோம்.
‘ஓரளவுக்கு விவரம் தெரியும் வயது வந்தவுடன் மகனோ, மகளோ தன்னுடன் கம்பெனிக்கு வந்து வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தன் பிஸினஸில் புதிய ரத்தம் பாய்ச்சி இளமையான எண்ணங்களோடு கம்பெனியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்றெண்ணி, செயல்படுபவர்கள் ஏராளம்.
ஈரோட்டைச் சேர்ந்த சௌபாக்யா கிரைண்டர் தயாரிப்பாளர்கள் அப்படித்தான் அடுத்த ஜெனரேஷனைக் களமிறக்கி உள்ளார்கள். ‘‘எங்கப்பா ஆரம்பிச்ச பிஸினஸ் இது. மூத்த அண்ணன் ராஜேந்திரன் சீன்னா, நாங்க E, ஷிஆ இருப்போம். அவர் நிர்வாகம், கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்வார். ரெண்டாவது பையனான நான் சென்னையிலே இருந்தபடி மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லாத் தையும் பார்த்துக் கொள்வேன். என் தம்பி ஆதிகேசவன், தயாரிப்புப் பணிகளைப் பார்த்துக்கொள்வார். எங்கள் மைத்துனர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், இப்போது பெங்களூர் பகுதி விநியோகஸ்தராகச் செயல்படுகிறார்.
இப்படிக் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள், பிஸினஸ் நன்மைக்காக உறவினர்களுக்குள்ளே கடிஞ்சு பேசறதோ, தேவை இல்லாத பிரச்னைகளிலே முறைப்பதோ கிடையாது. எங்களுடைய டார்கெட் ஒன்று... எங்களுடைய பயணம் அதை நோக்கித்தான் என்பதில் எல்லோருமே தெளிவாக இருப்போம்.
இதற்காக எல்லா வேலைகளையும் நாங்களே தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு பார்ப்போம் என்றில்லை. எங்களுடைய பணி களுக்கு நன்கு படித்த, திறமையான ஆட்களை நியமித்திருக்கிறோம். வெளி ஆட்களின் திறமையை எடுத்துக்கொண்டு, எங்களுக்கே உரிய பொறுப்பு உணர்ச்சியோடு செயல்படுகிறோம். நாங்கள் திட்டமிட்ட பாதையில் போய்க் கொண்டு இருக்கிறோம்’’ என்கிறார் சௌபாக்யா வரதராஜன்.
குடும்பத் தொழிலாக இருந்தாலும் வருடத்தில் மூன்று நாட்கள் மொத்த உறவினர்களும் ஒரே இடத்தில் கூடி, மகிழ்ச்சியோடு இருப்பதை வழக்க மாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இந்தக் குடும்பத்தினர்.
அம்பானி குடும்பமாக இருந்தாலும் சரி, ஆப்பக்கடை முனியம்மா குடும்பமாக இருந்தாலும் சரி, ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செய்யும்போதுதான் வேலையும் முழு வேகத்தோடு நடக்கும். லாபமும் நிறையக் கிடைக்கும்.
இதற்கு என்.கே விஷன்ஸ் என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணசாமியின் குடும்பம் நல்ல உதாரணம்.
‘‘இதுவரை 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். எங்களுக்குள் வேலைகளைத் தெளிவாகப் பகிர்ந்துகொள்வோம். டைரக்ஷன் பொறுப்பு என்னுடையது. என் மகன் பாலா தயாரிப்புத் தொடர்பான வேலை களையும், மற்றொரு மகன் சுரேஷ் கேமரா, எடிட்டிங் பணிகளையும் பார்க்கிறார்கள். ஸ்கிரிப்டைத் தயார் செய்யும் வேலை மகள் அனுவுக்கு!’’ என்றவர் ஒரு சம்பவம் சொன்னார்-
‘‘வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் படம் பிடிக்க அந்தச் சரித்திரத்துடன் தொடர்புள்ள இடங்களுக்குச் சென்றோம். இதனால், திட்டமிட்டதைவிட பட்ஜெட் ஏகத்துக்கும் எகிறிவிட்டது. அந்தச் சமயத்தில் நான் உட்பட எந்த டெக்னீஷியனுமே சம்பளம் பெறவில்லை. எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாக இருந்ததால் இந்த ப்ராஜெக்ட் மூலமாக நமக்குக் கிடைக்கப்போகும் நல்ல பெயர்தான் முக்கியம் என்ற நோக்கத்தோடு செயல்பட முடிந்தது. இதுவே, வெளியில் இருந்து டெக்னீஷியன்களைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களிடம் இந்த மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது, அது நியாயமும் கிடையாது. அதனால்தான் அடித்துச்சொல்கிறேன், ஃபேமிலி பிஸினஸ் எப்போதுமே சக்ஸஸ் தரும்’’ என்றார்.
‘‘எங்கள் வீட்டைப் பொறுத்தவரையில் ‘எப்போது பார்த்தாலும் கம்பெனி, கம்பெனி என்று அலைகிறீர்களே... உங்களுக்குக் குடும்பத்தின்மீது அக்கறையே கிடையாதா..?’ என்ற சண்டை வரவே வராது. காரணம், கம்பெனியில் சில பொறுப்புகள் அவர் கையில்தானே இருக்கிறது’’ என்றார் சென்னை, வேளச்சேரியில் ‘பிரின்ட் ஃபாஸ்ட்’ என்ற பெயரில் அச்சுப் பணிகளைச் செய்துவரும் முத்துகுமார்.
மார்க்கெட் மற்றும் வளர்ச்சிப் பணிகளை முத்துகுமார் கவனித்துக்கொள்ள, வரவேற்பு, வடிமைப்பு, அக்கவுன்ட் போன்றவற்றை மனைவி வெற்றிசெல்வியும், தயாரிப்பு, இதர வெளிப்பணிகளை மைத்துனர் ரவிக்குமாரும் கவனித்து வருகிறார்கள். புதிதாக முத்துகுமாரின் அண்ணன் மகன் மகேஷ் ஆஃப்செட் மெஷினில் பயிற்சி எடுத்து வருகிறார்.
முத்துகுமாரின் மனைவி பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர், கிராமத்துவாசி. இதனால், ஆரம்பத்தில் தொழில் பக்கம் வர மிகத்தயங்கியவரை இழுத்துப்பிடித்து உள்ளே கொண்டு வந்திருக்கிறார் முத்துகுமார். இன்று கார்ட்களை கம்ப்யூட்டரில் டிஸைன் செய்யும் அளவுக்குத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல, ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய மைத்துனர், இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சென்று ஆங்கிலத்தில் பேசி ஆர்டர் பிடிக்கும் அளவுக்குத் தயார்படுத்தி இருக்கிறார்.
‘‘குடும்பத்தினரே தொழிலில் ஈடுபடும்போது ஈகோ பார்க்காமல் விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்... வெற்றியை நோக்கி வேகமாக ஓடமுடியும். 3 லட்ச ரூபாயாக இருந்த டர்ன் ஓவர் ஐந்தே வருடங்களில் அரைக் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் ஒன்றரைக் கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஒரு பொறுப்பை வெளி ஆட்களிடம் ஒப்படைப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களிடம் தருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அலுவலக நேரம், சொந்தப் பிரச்னைகள் என்ற சிந்தனைகள் இன்றி, வேலையை முடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக குடும்ப உறுப்பினர்கள் செயல்படுவார்கள். இதனால், நம் இலக்கை வெகுவேகமாக எட்டிவிட முடியும்’’ என்றார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் சேர்ந்து சென்னை தி.நகரில் ‘ஸ்வஸ்திக்’ என்ற பெயரில் ஜெராக்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். குடும்பத்தில் மூத்தவரான குணசேகரன், ‘‘நான் திருச்சி யில் அரசுப் பணியில் இருந்தேன். ஒரு சகோதரர் ராஜஸ்தானில் வேலை பார்த்தார். அப்போது அப்பா சென்னையில் லூப்ரிகன்ட் ஆயில் விற்பனை மற்றும் ஜாப் டைப்பிங் சென்டரைத் தொடங்கி இருந்தார். ‘இந்த இரண்டு பிஸினஸ்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து தொழில் செய்யலாம்’ என்றார் அப்பா. அதன்படியே நாங்களும் வந்தோம். ஜாப் டைப்பிங், எலெக்ட்ரானிக் டைப்பிங்கானது. பிறகு கம்ப்யூட்டர் டி.டி.பி வந்தது. கூடுதல் வருமானத்துக்காக ஜெராக்ஸையும் இணைத்துக்கொண்டோம். கடைசியில் சேர்ந்த ஜெராக்ஸ் தொழில் நன்றாக சூடுபிடிக்க, ஆயில் விற்பனைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இதையே முழுநேரத் தொழிலாக்கிவிட்டோம். படிப்பு முடிந்ததும் தம்பிகள், தங்கைகளும் பிஸினஸுக்குள் வந்துவிட்டார்கள்’’ என்றவர், குடும்பத்தொழில் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிச் சொன்னார்.
’’குடும்ப உறுப்பினர்கள் பலர் ஒருங்கிணைந்து ஒரு தொழில் அல்லது வணிகத்தைச் செய்யும்போது தனித்தனியே முதலீடு போட வேண்டியதில்லை. உடனடி லாபமில்லை என்றாலும் தொழிலைத் தொடர்வதில் பிரச்னை இருக்காது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அத்தனை பேரும் விட்டுக்கொடுத்துப் போவார்கள். எங்கள் அனைவரின் வீடும் ஒரே காம்பவுண்டில்தான் என்பதால் பிஸினஸ் தொடர்பாக எப்போது வேண்டுமானலும் சந்தித்துப் பேச முடிகிறது. இப்போது அடுத்த தலைமுறையும் பிஸினஸுக்குள் வந்துவிட்டனர்’’ என்கிறார் குணசேகரன்.
பிரச்னை என்று ஏதாவது வந்தால் அனைவரும் ஒன்றுகூடி விவாதிக்கும் வாய்ப்பு குடும்பத் தொழிலில் அதிகமிருக்கிறது. மேலும், தொழிலில் ஈடுபடுவர்கள் வீட்டிலும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொள்ள முடிவதால், சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்து தொழில் வேகமாக வளர்ச்சி காணும். குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தொழில் நடக்கும் இடத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருப்பதால் ஊழியர்கள் ஒழுங்காகப் பணிபுரிவார்கள்.
திருப்பூரில் உள்ள ‘கிளாசிக் போலோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஷிவ்ராம், தன் சகோதரர்களுடன் இணைந்து தொழில் செய்து வருகிறார். அவர் சொல்லும் கருத்து அலசி ஆராய்வதாக இருக்கிறது. ‘‘குடும்பத் தொழில் என்பதே கூட்டுக் குடும்பம் போலதான். பெரும்பாலான குடும்பங்களில் அனுபவஸ்த அப்பாவோ, துடிப்பான மகனோ விட்டுக் கொடுத்துதான் போகிறார்கள். அப்படிப் போனால்தான் பிஸினஸில் வெற்றி கிடைக்கும். இந்தத் தலைமுறை இடைவெளி இல்லாமல், சகோதரன், சகோதரி, அவருடைய கணவர் என்று குடும்பத் தொழில் அமைந்தால் அங்கே வயது வித்தியாசம் குறையும். இதில் ஒரே வயது என்னும்போது, சிந்தனைகள் சீராக இருக்கும். அவர்களுக்குள் ‘நீயா, நானா’ என்ற ஈகோ வராதவரை பிரச்னை இல்லாமல் போகும் பிஸினஸ்!’’ என்ற ஷிவ்ராம், ‘‘குடும்பத் தொழில் செய்வோர் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு என்பதைத் தேவைகளை வைத்துத்தான் தீர்மானிக்கவேண்டும். இவ்வளவு தொகை இருந்தால்தான் குடும்பம் நடத்தமுடியும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால், நிர்வாகத்தினரிடையே நாளை பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. அண்ணன், தம்பிகள் சும்மா இருந்தாலும் திருமணம் முடித்து வீட்டுக்குள் வருகிற புது மனைவி, ஏதாவது பிரச்னை கிளப்பிவிடக்கூடாது. மனைவியை இந்தக் குடும்பத்து பாரம்பர்யத்துக்குத் தயார் செய்யவேண்டியதும் அவசியம். அப்போதுதான் வீட்டுக்கு வரும்போது நிம்மதி இருக்கும். வியாபார வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது தனிமனித வாழ்க்கைதான் என்பதை குடும்பத் தொழிலில் இருப்பவர்கள் எப்போதும் மறந்து விடக்கூடாது’’ என்றவர், அதிலேயே அடுத்த பாயின்ட் சொன்னார்.
‘‘குடும்பத் தொழிலில் பாதகமான விஷயங்களும் இருக்கின்றன. தொழிலில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் தவறு செய்யும்போது, உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. குடும்ப உறவில் சிக்கல் உருவாகாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
ஒரு தொழிலில் லாபம் பிரிப்பது சுலபம். தொழிலைப் பிரிப்பது கடினம்! அந்த எல்லைக்குப் போகாமல் இருக்க குடும்பத்தாரைச் சமாளிக்கவேண்டும். குடும்பத் தொழில் தானே என்று ஒரே காம்பவுண்டுக்குள் வீட்டு உறுப்பினர்களை அடக்கக்கூடாது. ஒரு வீட்டுக்கு ஒரு ராணிதான். அப்படி சமையல்கட்டுகளைப் பிரித்துவிட வேண்டும். தனித்தனி வீடுகளும் சமையல் கட்டுகளும் இருந்தாலே பல பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
மனைவி நம் வழிக்கு வராமல், சகோதரர்கள், அவர் குடும்பத்தார் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தால் வீம்பாக நாமும் நிற்கக்கூடாது. பதிலாக அவருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்து, அதில் அவரை ஈடுபடுத்தி விடுவது புத்திசாலித்தனம். குடும்பத் தொழிலில் இருப்பவர்கள் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது தொழில்வளர்ச்சிக்கு உரம் போடுவதாக அமையும்’’ என்றார் ஷிவ்ராம். இவருடைய சகோதரர்கள் மூவரும் கூட்டாக நிர்வாகத்தைப் பிரித்துக் கவனித்துக் கொள்ள, இவர்களது திருமதிகள் வெவ்வேறு சிறிய யூனிட்களின் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
இன்னொரு உதாரணத்தையும் சொன்னார் ஷிவ்ராம்- ‘‘இப்படிப் போனால், சகோதரர்கள் காலம் வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. அடுத்த தலைமுறை ஃபாரின் படிப்பு, டெக்னாலஜி வளர்ச்சியோடு வரும்போது, இரண்டுவிதமான டைவர்ஷன்களில் இழுக்க ஆரம்பிப்பார்கள். ஒருமுக சிந்தனை இல்லாமல் அடுத்தடுத்து வாக்குவாதங்கள் வர நேர்ந்தால், குடும்பத் தொழிலுக்கு அதுதான் அலார மணி. மூத்தவர்களே முன்நின்று யாருக்கு எது பிடிக்கிறதோ, அதைக் கொடுத்து பிரித்துவிடவேண்டும். அப்படிப் பிரிக்கும்போது, ஒவ்வொரு தொழிலும் கிளைவிட்டு நன்கு வளரும். சண்டைகளுடனே இருக்கிற நிலை நீடித்தால், வளர்ச்சியையும் குலைத்து, தொழிலையும் கீழே இறக்கிவிடும். ஃபேமிலி பிஸினஸில் இருக்கிறவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது!’’ என்று முத்தாய்ப்பாகச் சொன்னார் ஷிவ்ராம்.

வாருங்கள்...வழிகாட்டுகிறோம்...!
தொ ழில் சார்ந்த பல்வேறு சேவைகளை அளித்துவரும் டான்ஸ்டியா - எஃப்.என்.எஃப் சேவை மையம், வாரிசுகள் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.
‘‘டைனிங் டேபிளில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும்போது பிஸினஸ் பற்றிப் பேசுவது வெளிநாடுகளில் வழக்கம். ஆனால், இங்கே தாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது தெரியாமலே பிள்ளைகளை வளர்க்கிற பெற்றோர்கள்தான் அதிகம். ‘குடும்பச் சொத்தைப் போலவே குடும்பத் தொழிலிலும் வாரிசுகளுக்குப் பங்கு இருக்கிறது’ என்ற எண்ணத்தை சிறுவயதிலேயே அவர்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். இதற்காக பிள்ளைகளுக்கு ஓய்வு இருக்கும்போது, பிஸினஸ் நடக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று காட்டுவதோடு, அதுதொடர்பான விஷயங்களை விளக்கிச் சொல்லவேண்டும்’’ என்றார் அதன் இயக்குநர் சரஸ்வதி.
கோவையில் ஒரு கோர்ஸ்!
பா ரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (பி.ஐ.எம்), ‘குடும்பத் தொழிலைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது எப்படி?’ என்பது தொடர்பாக குடும்பத்தொழில் மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு டிப்ளமோ படிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. இரண்டு ஆண்டு படிப்பான இதை, வரும் அக்டோபர் மாதம் முதல் கோவையில் ஆரம்பிக்கிறது.
குடும்பத்தொழிலில் ஈடுபட விரும்பும் வாரிசுகளுக்குப் பயனுள்ள படிப்பாக இருக்கும். பிஸினஸ் அடிப்படை நிர்வாகம், அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தல், தொழிலாளர்களுடான உறவு, மூத்த பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பிஸினஸை எப்படி வெற்றிகரமாக நடத்துவது போன்ற அம்சங்களோடு இருக்கப்போகிறது இந்தப் படிப்பு. தென்னிந்தியாவின் மேலாண்மை கல்லூரிகளில் முக்கிய இடத்தில் இருக்கும் பி.ஐ.எம்-மில் படிக்க தவம் கிடக்கிறார்கள் இளைஞர்கள்.
‘‘சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரி செமினாரில் பேசிய ஒரு தேசியத் தலைவர், ‘தந்தையின் நிறுவனங்களை வாரிசுகளால் நிர்வகிக்க முடியாத விஷயம்’ குறித்து கவலைப்பட்டு, எங்களிடம் நீண்ட நேரம் விவாதித்தார். குறிப்பாகச் சொல்லப்போனால் விருதுநகர், சிவகாசி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை போன்ற ஊர்களில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக உள்ள பல தொழிலதிபர் குடும்பங்களில் இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தது. இதன்பிறகுதான் நாங்கள் ‘ஃபேமிலி பிஸினஸ் மேனேஜ்மென்ட்’ படிப்பின் அவசியத்தை உணர்ந்து, உடனடியாக இந்த கோர்ஸை ஆரம்பிக்க முடிவெடுத்தோம். தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூரை இதற்கான மையமாகத் தேர்ந்தெடுத்து அங்கு கிளை திறந்துள்ளோம்’’ என்றார் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இயக்குநர் சங்கரன்.
‘‘நம் ஊருக்கு ஏற்ற பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் செலவழித்து, இதற்கான பாடப் பிரிவுகளை உருவாக்கி இருக்கிறோம். நார்மல் எம்.பி.ஏ பட்டப் படிப்பில் 2 வருடங்களில் 24 பேப்பர்கள் படிக்க வேண்டியிருக்கும். இந்தப் படிப்பில் அதே இரண்டு வருடங்களில் 21 பேப்பர்களோடு தன் தந்தையின் தொழில் பற்றிய ஒரு ‘ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’ செய்ய வேண்டி இருக்கும். முக்கியமாக இந்தப் படிப்பை படிக்க விரும்புவர்களின் பெற்றோர் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருக்கவேண்டும்’’ என்ற சங்கரன் சிறு இடைவெளிவிட்டு தொடர்ந்தார்,
‘‘ஃபேமிலி பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பில், ரிஸ்க் எடுத்தால்தான் பிஸினஸில் ஜெயிக்கமுடியும் என்பதை வலியுறுத்துவோம். தன் தந்தையின் தொழிலைக் கவனிக்க வருகிற பலருக்கு பெரிய சவாலாக இருப்பது ‘ஒர்க்கிங் கேப்பிட்டல்’ எனப்படும் முதலீட்டைக் கையாள்வதுதான். பணத்தை பேலன்ஸ் செய்யும் வித்தை தெரியாததினால்தான் நிறையப்பேர் வட்டிக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு, கடைசியில் நிறுவனத்தையே காவு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படி அடிப்படையான நிர்வாகவியல் மற்றும் பிஸினஸ் நுட்பங்களோடு உலகளாவிய மேலாண்மை நுட்பங்களையும் அவர்களுக்கு அடையாளம் காட்டப்போகிறோம். இந்த அடிப்படையான ‘தியரி’ விஷயங்களைக் கற்பதன் மூலம் தந்தையின் நிறுவனத்தை செம்மைப்படுத்தி, செழிப்பாக வளர்க்கும் வித்தை அவர்களுக்கு பிராக்டிகலாக கைகூடிவிடும்’’ என உற்சாகமாக முடித்தார் சங்கரன்.
- மு.தாமரைக்கண்ணன்
படம்: எஸ்.சாய்தர்மராஜ்

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்!


வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்!

தொழில்

வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப்பணிகள்!
எந்த ஒரு தொழிலிலுமே எடுத்த எடுப்பில் லாபம் பிய்த்துக்கொண்டு கொட்டுவதில்லை. வெளியில் இருந்து பார்த்தால் எல்லா தொழில்களும் லாபம் கொழிக்கும் வாய்ப்பாகவே தெரியும். இறங்கி வேலை செய்யும்போது, சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அது, தொழிலுக்கான ஆரம்பகட்ட வேலைகளில் இருந்தே தொடங்குகிறது.
அஸ்திவாரம் எடுக்கும்போது வெறும் மண் குவியல்களாகத்தான் தெரியும். கட்டி முடித்தபிறகு அதன் அழகுணர்ச்சியும், வெளிப்புற வடிவங்களும் மனதை ரம்மியமாக்கும். அதைப்போலத்தான் ஆரம்பகட்ட வேலைகளும். உருவத்தைத் தருவதற்கு ஆகும் நேரங்கள், வருமானமில்லா செலவுகள் என முக்கியமான சில அஸ்திவாரப் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டுவிட்டால் அதன்பின் தொழில் ஜொலிக்கத் துவங்கிவிடும். அஸ்திவாரத் திட்டமிடுதல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எந்தத் தொழிலை ஆரம்பிக்க உள்ளோமோ, அவற்றுக்கான தியரி கிளாஸ்தான் இப்போது நாம் பார்க்கப் போவது! ஏதேனும் ஒரு வழியில் உங்களுக்குப் பரிச்சயம் உள்ள தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். இதில்தான் ஆரம்பிக்கப் போகிறேன் என முடிவெடுத்த பிறகு செய்யவேண்டிய முதல் வேலை, அதைப்பற்றிய முழுத் தகவல்களையும் சர்வே செய்வது!
உதாரணமாக, விதவிதமான துணிகளை வைத்து விற்கும் ரெடிமேட் கார்மென்ட் ஷாப் துவங்கப் போவதாகக் கொள்வோம். ‘அந்தத் தொழில் எத்தனை சதவிகிதம் வருமானத்தைத் தரும்... அதற்கான வாய்ப்புகள் என்ன... வாடிக்கையாளர்கள் யார்... சுற்றுப்புறத்தில் இதுபோன்ற கடைகள் எங்கெங்கு உள்ளன... போட்டி யாளரின் விலை விவரங் கள்... தன் வாடிக்கை யாளர்களுக்கு கடை பற்றிய அறிமுகத்தை எப்படித் தருவது?’ என்று தெளிவான ஒரு பார்வை இருக்கவேண்டும்.
தொடங்கும் தொழில் மற்றும் அத்துறை சார்ந்த விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இப்போதைய வாய்ப்புகள் எதிர் காலத்தில் எந்த மாதிரி யான மாற்றங்களுக்கு ஆளாகும்..? என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
தொழில் ஆரம்பிக்கும் பகுதியின் பூகோள அமைப்பு, அங்குள்ள மக்களின் வாங்கும் சக்தி என்ன... அவர்களின் சராசரி வருவாய் விகிதம் என்னவாக இருக்கிறது... வாடிக்கையாளர்களின் டேஸ்ட் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பது, தொழிலைத் திட்டமிட பயன்படும்.
அந்தத் தொழிலுக்கே உரிய சட்டப்படியான நடைமுறைகளை அறிந்து, அதற்கேற்ற இடமாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரு டிராவல்ஸ் ஆரம்பிப்பதாக இருந்தால், கார்களின் பர்மிட்டைப் பொறுத்தவரை ‘ஆல் இண்டியா பர்மிட்’, ‘ஸ்டேட் பர்மிட்’ என இருவகை உள்ளது. ஆல் இண்டியா பர்மிட் உள்ள வண்டிகளுக்கு பத்துவருடம் வரைதான் லைசென்ஸ். வருடம் முடிந்தவுடன் தானாகவே லைசென்ஸ் கேன்சலாகிவிடும். அதன்பிறகு சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்த விவரங்களோடு இன்ஷூரன்ஸ், வருடத்துக்கான வரி எவ்வளவு, வெளிமாநிலங்களுக்குச் சென்றால் டேக்ஸ் என்ன என்பது முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
கடை என்றால் தேவையான இன்டீரியர் வேலைகளுக்கான செலவுகள், கால அவகாசம் இவற்றையும் கணக்கிடவேண்டும். வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்வதாக இருந்தால், ஆகும் இடைக்காலச் செலவுகள், நல்ல திறமையான ஊழியர்களைப் பணி அமர்த்துவது என குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும்.
அலுவலகம் என்றால் தேட ஆரம்பிக்கும்போதே தொழிலுக்கு பெயர் வைப்பது, சரக்குகளை வாங்குவது, எந்தப் பொருளை எங்கே வைத்தால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் என்ற விஷயங்களில் தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் ஏரியா ஒதுக்கமுடியுமா என்பதைக் கவனிக்கவேண்டும். தொலைபேசி இணைப்பை இந்தக் காலகட்டத்திலேயே வாங்கிவிடவேண்டும்.
அடுத்தபடியாக விசிட்டிங் கார்ட்! கடை துவங்கும் வேலை ஆரம்பித்த நாளிலிருந்தே தெரிந்தவர், வருவோர் போவோர் எல்லோருக்கும் இப்படி ஒரு வேலை நடந்துகொண்டு இருக்கிறது. இந்தத் தேதியில் கடை திறப்புவிழா என்று விளம்பரப்படுத்த ஆரம்பியுங்கள். இதுதான் உங்களது விளம்பர உத்தியில் பிரம்மாஸ்திரம். கடைச்சரக்கு பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை பிட் நோட்டீஸாகக் கொடுத்து விளம்பரம் செய்யவேண்டும்.
இவை அனைத்துக்கும் தொழில் ஆரம்பிக்கும் முன்னரே செலவு செய்யவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் கையில் பணம் இருக்கவேண்டும். கடன் வாங்குதல் கூடாது.
எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்கி நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு வருமானத்துக்கான வழிகள் அரண்மனைக் கதவுகள் போலப் பெரிதாகத் திறக்கும்.
தொழில் பற்றிய விவரங்களை வைத்துக் கொண்டு, திட்ட அறிக்கையினைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இந்தத் தொழில் ஆரம்பித்தால் எவ்வளவு முதலீடு தேவைப்படும். செய்த முதலீட்டை எத்தனை மாதங்களில் எடுக்கமுடியும். மாதம் எவ்வளவு சம்பாதிக்கமுடியும்... நடைமுறை மூலதனம் போன்ற விவரங்கள் அடங்கியதே அது. இத்துடன் இதற்கான காலம் எவ்வளவு ஆகும் என்பதையும் கணக்கிடவேண்டும். அதில் முதலீட்டின் வட்டிவிகிதம் அடங்கும்.
திட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பட்ஜெட் போடவேண்டும். அதில் ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டும், சிக்கனமாகவும் பில்வாங்கியும் கணக்கு எழுதிவைக்கவேண்டும்..
இந்தக் காலத்தில் உங்களது சொந்த வேலைகள் பாதிக்கப்படும். வருமானம் இல்லாமல் செலவுகள் ஆகும். போக்குவரத்துச் செலவுகள், புரோக்கர் கமிஷன்கள், தேடுவது கிடைக்கும்வரை ஆகும் விரயங்கள் என இதுவே ஒரு பெரும்தொகையாக இருக்கும். இதனைச் சமாளிக்கவும் பணம் கையிருப்பு இருக்க வேண்டும். இவற்றை முதலீட்டில் சேர்த்துக் கணக்கிடுவதா அல்லது செலவுகளாகச் சேர்த்துவிட்டு லாபத்தைக் குறைத்துக்கொள்வதா என்ற விவரமும் தெரிந்திருக்கவேண்டும். பொதுவாக, ஒரு திட்டம் துவங்கும் முன் ஆகும் செலவினங்களை முதலீடாகவே எடுத்துக்கொள்வார்கள்.
எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே! அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது!

Call Taxi Business in Tamilnadu

Call Taxi Business in Tamilnadu


தொழில்

இந்த கார், எந்தன் சொந்தகார்!
எ த்தனை விதவிதமான மாடல்கள், வண்ணமயமான கலர்கள், மனதைக் குதூகலிக்க வைக்கும் வசதிகளோடு இந்திய மற்றும் வெளிநாட்டு கார்கள் இந்தியச் சாலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. கால் டாக்ஸிகள் வந்தபிறகு, கார்களில் பயணம் செய்ய விரும்புபவர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது என்றே சொல்லலாம். பலரும் இந்தத் தொழிலில் இருந்தாலும் எதிர்கால வாய்ப்புள்ள, இளமையான பிஸினஸாகவே தெரிகிறது கார் வாடகைத் தொழில்!
அலுவலகம் வைத்து முழு நேரத் தொழிலாகத்தான் செய்யவேண்டும் என்றில்லை. தனிப்பட்ட ஒருவரே, ஓனர் கம் டிரைவராக இருந்து வருமானம் தரும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முடியும். புதிதாகத் தொழில் ஆரம்பிக்க விருப்பம் உள்ளவராக இருந்து, கார் டிரைவிங் தெரிந்தாலும், கார் ஓனராகலாம். நீங்களே கார் ஓட்டும் பட்சத்தில் மாதம் 15,000 ரூபாய் வரை வருமானம் வரும்.
புதிய கார்களுக்கு வரவேற்பும், அதிக வாடகையும் கிடைக்கும். முதல் இரண்டு வருடத்துக்கு எஃப்.சி கிடையாது. மேலும், இரண்டு, மூன்று வருடத்துக்காவது ரிப்பேர் செலவுகள் இருக்காது. முதலீடு என்று பார்த்தால், வாங்கும் காரின் விலையில் மூன்றில் ஒரு பங்கு கையில் இருந்தாலே போதும். மற்ற தொழில்களைப் போல கடை அட்வான்ஸ், வாடகை, மின்கட்டணம் போன்ற எதற்கும் தேவை இருக்காது.
ஐந்து வருடத்துக்கு உட்பட்ட நல்ல கண்டிஷனோடு இருக்கும் செகண்ட்ஹேண்ட் கார்களையும் வாங்கலாம். இதற்கு தனியார் நிதி நிறுவனங்களில்கூட கடன் கிடைக்கிறது. கார் எப்போதும் சுத்தமாக பளிச்சென்றும், நல்ல கண்டிஷனோடும் இருக்க வேண்டும்.
ஆனால், வருடத்துக்கு ஒரு முறை கட்டும் கார் இன்ஷூரன்ஸ், டேக்ஸ் போன்றவற்றை ரெகுலராக செலுத்தி வரவேண்டும். புதிய கார்களுக்கு அதிகமாக உள்ள இன்ஷூரன்ஸ் கட்டணம், வருடங்கள் செல்லச் செல்ல குறைந்துகொண்டே வரும். வாடகை கார்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சாலை வரி செலுத்தவேண்டும்.
உங்களுக்கு நேரடியாக எத்தனை வாடிக்கையாளர்களைத் தெரியும் என்பதைப் பொறுத்தே வருமானம் அமையும். நண்பர்கள், உறவினர்கள் தவிர, குறைந்தபட்சம் நூறு பேராவது லிஸ்டில் இருக்கவேண்டும். ‘வாடிக்கையாளரை எங்கே போய் தேடுவது...’ என்கிறீர்களா..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
ஏற்கெனவே, டிராவல்ஸ் வைத்திருப்பவர்கள் மூலமும் கார் அனுப்பலாம். வளர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சமில்லை. அங்கு எப்போதும் கார் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் உங்களுக்கும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். அதை லட்டுமாதிரி பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் அவர்கள் கமிஷனாக ஒரு தொகை போகும். லோக்கல் ட்ரிப் என்றால் நூற்றுக்கு பத்து ரூபாயும் அதிக கி.மீ செல்லும் பயணமாக இருந்தால் கி.மீக்கு 50 பைசா என்பதும் பொதுவான கமிஷன் நடைமுறை.
சென்னை போன்ற பெருநகரங்களில் கால்சென்டர்களில் இதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மேலும், மத்திய, மாநில அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கான கார் தேவையை, டெண்டர் மூலம் எடுக்கலாம். பள்ளிக் குழந்தைகளை அழைத்து வர, ஒப்பந்தம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் பெருகி உள்ளன. நட்சத்திர ஓட்டல்களின் வாடிக்கையாளர்களுக்கு கார் தேவை அதிகரித்துள்ளது. இவை எல்லாமே நீங்கள் நேரடியாக வருமானத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்புகளே. கல்லூரி, நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களுக்கும் திருமண நாட்களிலும் தேவைப்படும் கார்களை வெளியில் இருந்து எடுத்துத்தரலாம்.

Call Taxi Business in Tamilnadu


பள்ளி, கல்லூரி விடுமுறைகாலங்கள் வருமானத்தின் இரும்புக்கோட்டைகள் என்று சொல்லாம். சாதாரணமாக கோடைக்காலத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது அதிகமாக இருக்கும். அதுபோலவே கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை, பழனி கோயில்களுக்குச் செல்வது... குற்றால சீசன், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சீசன்கள்... என வரிசைகட்டி நிற்கும். அலுவலக விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள், வெளிநாட்டுக்குச் சென்று வருவோருக்கான பிக்-அப், டிராப் என தினமும் தேவை இருக்கும்
பராமரிப்பு கவனம் முக்கியம். சிறுசிறு ரிப்பேர்கள்... மூவாயிரம் கி.மீக்கு ஒரு முறை இன்ஜின் ஆயில் மாற்றுவது... நீண்ட தூரப் பயணம் போய்வந்தால் வாட்டர் சர்வீஸ்... ஆறுமாதத்துக்கு ஒருமுறை வீல் அலைன்மென்ட் பார்ப்பது... இதயப் பகுதியான இன்ஜின், ரேடியேட்டரைத் தினமும் கவனித்து வருவது அவசியம். இடையிடையே ஏற்படும் சிறுசிறு ரிப்பேர்களை உடனுக்குடன் சரிசெய்து வருமான இழப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு தொழிலிலும் உள்ள ரிஸ்க் போலவே இதற்கும் உண்டு. வாடிக்கையாளர்கள் பணம் தர 10,15 நாட்கள் ஆக்கலாம், இழுத்தடிக்கலாம். அதற்கும் தயாராக இருக்கவேண்டும். மழைக்காலங்களில் வாய்ப்புகள் போலவே, ரிப்பேரும் அதிகமாக வரும். அடிக்கடி சர்வீஸ் செய்யவேண்டியது வரும். சிலசமயம் வருமானமே இல்லாமல், செலவு வைக்கும் கார்களும் உண்டு. செகண்ட் ஹேண்ட் கார்களில் இந்த வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத விபத்து, வியாபாரப் போட்டிகளினால் டல் அடிக்கும் நேரங்கள் என வருமான இழப்பும் உண்டு. வருடத்துக்கு ஒரு முறை எஃப்.சி (ஃபிட்னஸ் சர்டிஃபிகேட்)க்காக ஆகும் செலவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும்.
ஒரு சில நாட்கள் டல்லடித்தாலும், சீசனில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக குறைந்தபட்சம் ரூபாய் 300 என்றாலும் மாதம் சராசரியாக ரூபாய் 10,000 வருமானம் பார்க்கமுடியும். இதில் காருக்குச் செலுத்தவேண்டிய மாதத் தவணை ரூபாய் ஐயாயிரம் போக ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் போது, சொந்தமாகவே டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம். காருக்காக வங்கியில் வாங்கிய கடனைச் சரியாகச் செலுத்திவந்தால் மேலும், புதிய கடன் வசதிகள் கிடைக்கும்.
‘தினமும் என்னைக்கவனி’ என்ற வாசகத்துக்கேற்ப சிறிதுநேரம் மட்டும் கவனித்துவந்தால் போதும். வண்டி ஓடிக்கிட்டே இருக்கும்... வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கும்... நீங்களும் சம்பாரிச்சுக்கிட்டே இருக்கலாம்!

Call Taxi Business in Tamilnadu


சீமாறு | துடைப்பம் தயாரிப்பு | Thudaipam Thayaarippu |

வருமானத்தைப் ‘பெருக்கலாம்’!

தொழில்

வருமானத்தைப் ‘பெருக்கலாம்’!
பா ர்த்தால் சின்ன துடைப்பம்தான்... ஆனால், அதற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன்.
இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம்.
40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், குறைந்தபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். மழைக் காலம் தொழில் நடத்த ஏதுவாக இருக்காது.
இந்தத் தொழிலின் தன்மை பற்றி விவரித்தார் பைசுல்ஹுசைன். ‘‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.
சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.
இந்தத் தொழிலில் இன்னொரு தரப்பு, மொத்த வியாபாரிகள்... இவர்கள் சேகரிக்கும் துடைப்பங்களைத் தரம் பிரித்து, ஐம்பது ஐம்பதாக பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஃபார்வேர்டிங் ஏஜென்ட்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.
சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!

சீமாறு 

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
தொழில்
 
‘ மூளை’தனம்
நல்ல ஐடியா முதலீடைத் தரும்!
வெ றுங்கையால் முழம் போட்டு கோடிகளைப் பிடித்தவர் தரும் பிராக்டிகல் தொடர்!
துணிகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஜெர்மனியில் உள்ள பெரிய துணி வியாபாரியிடம் இருந்து அவர்களுக்கு ஒரு ஆர்டர் கிடைக்க, சந்தோஷமாகத் தயாரித்து அனுப்பினார்கள். பல நூறு கோடி ரூபாய் ஆர்டர் கிடைத்து, அந்நிறுவனம் பெரிய அளவில் விரிவாக்கம் நடந்து ஏகப்பட்ட ஊழியர்கள் சேர்க்கையுடன் வெற்றிகரமாகவே சென்றது பிஸினஸ்.
அந்த வேளையில் ஜெர்மன் துணி வியாபாரி புதிய கட்டளை ஒன்றைப் போட்டார். ‘உங்களிடம் ஆர்டர் கொடுத்து, சரக்கு என் கைக்கு வரும்போது 85 நாட்கள் ஆகிறது. இன்னும் விரைவாக 40 நாளில் கொடுக்கவேண்டும்! இல்லையேல் விலை சற்றுக் கூடுதலானாலும் பரவாயில்லை என்று உள்ளூர் மார்க்கெட்டிலேயே நான் வாங்கிக்கொள்ள நேரிடும்’ என்பதுதான் அவரது கட்டளை.
நிறுவனம் கணக்குப் போட்டுப் பார்த்து, திணறி நின்றது. ஆர்டர் கைக்குக் கிடைத்தவுடன், அதற்கான துணிகளை வரவழைக்க ஐந்து நாட்கள். ஃபேக்டரிக்கு வந்ததும் அதை வெட்டி, தைத்து, அழகாக பேக் செய்து பெட்டிகளில் அடுக்கி, பார்சல் செய்ய... 45 நாட்கள். அதைத் தனிக் கப்பலில் அனுப்ப... 35 நாட்கள். இதில் போக்குவரத்து நாட்களிலும் துணிகள் கொள்முதல் செய்யத் தேவைப்படும் நாட்களிலும் ஏதும் செய்யமுடியாது. தையல் நேரத்தை வேண்டுமானால் பத்து நாட்கள் வரை குறைக்கமுடியும்.
என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தது நிர்வாகம். சரியான ஏற்பாடுகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் நிறுவனமே மூன்றே மாதத்தில் நொடித்து நிதி சிக்கலில் சிக்கிக்கொள்ளும் என்பதுதான் நிர்வாகிகளின் கவலை.
இந்தத் தகவல் அரசல் புரசலாக ஊழியர்களிடம் பரவ... பீதி சூழ்ந்தது. பலர் வேறு வேலைகளுக்குத் தாவ, இடம் பார்க்க ஆரம்பித்தனர். அந்நிலையில் நிர்வாகத்தைச் சந்திக்க வந்தார் தையல் பிரிவு ஊழியர் ஒருவர். ‘சார்! 40 நாளில் டெலிவரி கொடுக்க ஒரு வழி இருக்கு’ என்றார்.
‘வியாபாரப் படிப்பு படித்த பலரும் சொல்லாத யோசனையை ஒரு ஊழியரால் எப்படிச் சொல்லிவிட முடியும்’ என்று யோசிக்கவில்லை நிர்வாகி. ஆர்வமாக, காது கொடுத்தார்.
‘துணியைத் தேர்ந்தெடுத்து, வாங்கி ரகம் வாரியாக வெட்டி எடுக்க ஆகும் 5 நாட்களையும் போக்குவரத்துக்கு ஆகும் 35 நாட்களையும் கூட்டினால் கம்பெனிகாரர்கள் கேட்கும் 40 நாட்கள் வந்துவிடுகிறதே..?’ என்ற,
தொழிலாளி சொன்ன திட்டம் இதுதான். ‘தொழிற்சாலை தையல் இயந்திரங்களை கப்பலில் ஃபிக்ஸ் செய்துவிடவேண்டும். தைப்பது, அயர்ன், பேக்கிங் இந்த வேலைகள் அனைத்தையும் கப்பலில் வைத்தே முடித்துவிடவேண்டும். ஊழியர்களை அழைத்துச் சென்று வர சற்று செலவு கூடும். ஆனால், இந்த ஏற்பாடு மூலம் நிறுவனம் பெறப்போகும் நற்பெயரோடு ஒப்பிட்டால், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல...’
நிர்வாகி முகத்தில் மகிழ்ச்சி. ஊழியர் சொன்ன திட்டத்தில் உள்ள சிறுசிறு ஓட்டைகளைக் களைந்து, செயல்படுத்தியதில் அந்த நிறுவனம் பழையபடி வெற்றிப்பாதையில் நடைபோட்டது. ஒரு யோசனை ஒரு நிறுவனத்தையே தூக்கி நிறுத்தியது.
சென்னையில் இருக்கிற லங்கா லிங்கம் என்ற இளைஞரும் இப்படி ஒரு சவாலை சந்தித்து ஜெயித்தவர்தான். அப்பா முருகேசு ஆரம்பித்த அப்பள பிஸினஸில் நுழைந்த நேரம். தரம் எப்போதுமே முக்கியம் என்பது அவரது அப்பாவின் தாரக மந்திரம்.
தன் 21-வது வயதில் அப்பள பிஸினஸில் உள்ளே நுழைந்ததும் லிங்கம் செய்த புரட்சி, வெறும் அப்பளங்களாக விற்பதைவிட, பொரித்த அப்பளங்களாக, அப்படியே சாப்பிடும் விதமாக தயார்செய்து விற்கலாம் என்ற யோசனைதான். இந்தத் திட்டத்துக்கு உள்ளூரைவிட, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதையும் அறிந்து கொண்ட லிங்கம், இதற்காக லண்டனில் இருக்கும் மொத்த வியாபாரி ஒருவருடன் ஒப்பந்தம் போட்டார். தயாரிக்கும் அப்பளங்களை அப்படியே மொத்தமாக வெளிநாட்டு வியாபாரிக்குக் கொடுத்துவிடுவது... அவர் தன் வாடிக்கையாளர்கள் உள்ள வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பது என்பதுதான் திட்டம். இரண்டு இங்கிலீஷ் கஸ்டமர்களுடன் தொடங்கிய வியாபாரம், இந்திய கிராமத்துக் கைப்பக்குவத்தில் கிடுகிடுவென 20,000 கஸ்டமர்களைப் பெற்றுத் தந்தது. உள்ளூர் பிஸினஸைவிட, ஃபாரின் வியாபாரம் சூடுபிடித்தது.
ஒருமுறை கடும் மழை காரணமாக, அப்பளத் தட்டுப்பாடு. உடனடியாக அப்பள பார்சல்களை எதிர்பார்த்தார் வெளிநாட்டு வியாபாரி. கப்பலில் பார்சல்களை அனுப்பிவந்த லிங்கத்தால் அவரது உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை. தொழில் போட்டியாளர்களையும் சமாளிக்க வேண்டிய இக்கட்டான அந்தச் சூழலில் தெளிவாக ஒரு முடிவெடுக்காவிட்டால், இத்தனை நாள் கட்டிக்காத்த வியாபாரம் மொத்தமும் அம்பேல் ஆகிவிடும்... என்ன செய்வது? லிங்கம் தன் தந்தையிடம், ‘இந்த பார்சல்களை விமானம் மூலம் அனுப்பினால் என்ன?’ என்று ஐடியா சொன்னார். ‘சுண்டைக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணமா?’ என்று திகைத்த அவருடைய தந்தை முருகேசுவை, வேறொரு திட்டம் மூலம் சம்மதிக்க வைத்தார் லிங்கம்.
‘தேவைக்காக சப்ளை செய்யும் நிலையில் இந்தப் போக்குவரத்துச் செலவை அவரையும் பகிர்ந்துகொள்ள வைப்போம். அதுதவிர, வாங்கும் சரக்குக்கு உடனே பணம் கொடுத்துவிடவேண்டும் என்போம்’ என்பதுதான் லிங்கம் சொன்ன திட்டம். அது ஒர்க் அவுட் ஆனது. தனி விமானங்கள் மூலம், கன்டெய்னர்களில் அப்பளம் கை மாறின. இன்று நிலை என்ன தெரியுமா..? வெளிநாட்டு ஆர்டர்கள் எல்லாமே விமானம் மூலம்தான் போகின்றன.
சில கோடி ரூபாயில் அப்பள பிஸினஸ் செய்துகொண்டிருந்தாலும் லிங்கத்தின் சிந்தனை மெகா ரகம். பெரிய பிஸினஸாக டர்ன் ஓவரில் 100 கோடிகளைத் தாண்டி, 1,000 கோடிகளைத் தாண்டி வியாபாரம் செய்யவேண்டும் என்பது அவரது கனவு. அப்பள பிஸினஸில் இருந்தபடியே, கை தாங்கும் சிறு முதலீட்டில் பெரிய பிஸினஸ் என்ன என்று பார்த்தார். ஆட்டோமொபைல் துறை அவரது கனவுக்குக் கதவு திறந்துவிடும் என்று தெரிந்தது. டொயோட்டா ஏஜன்ஸி எடுத்தார்.
கையில் இருந்து போட்டதைவிட, வங்கிக் கடனில் புரட்டிய முதல் அதிகம். கார்களை வாங்கி விற்கும் பிஸினஸில் இறங்கிய சில ஆண்டுகளிலேயே 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என்ற அவரது முதல் கனவை எட்டினார். இன்று 300 கோடியைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல்.
லிங்கத்திடம் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி சொல்வார். ‘ஐடியா இருந்தால், எவ்வளவு பெரிய பிஸினஸுக்கும் கை முதல் தேவைப்படாது!’ என்பதுதான். நல்ல ஐடியாக்கள் காசைக் கொண்டு வந்து நம் முன் நிற்கவைக்கும் என்பதைத்தான் அப்படிச் சொல்வார். எங்கே, எப்படி வரும் என்பது தெரியாவிட்டாலும் வரவேண்டும் என்று நினைக்கிற தொகை கைக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதைத் தன் பிஸினஸில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கும் துடிப்பான ரசனைக்காரர்.
பொதுவாக, ஒரு எம்.டி-யின் பிரத்யேக அறை என்பது அவரவர் ரசனைக்கேற்ப, அலங்காரமாக, பெரிதாக, சிறிதாக, குளிர்ச்சியாக என்று இருக்கும். கோயம்பேடு ரோகிணி தியேட்டர் எதிரில் உள்ள இவரது ‘டொயோட்டா அலுவலகம்’ முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கும் ரசனை கொண்டது.
நான்காவது மாடியில் அறை. வழக்கமான ரிசப்ஷன். உள்ளே நுழைந்தால், பளீரென முகத்தில் அடிக்கிறது வெயிலின் தாக்கம். கூடவே, ஏ.ஸி-யின் சில்! மொட்டை மாடியில் மூன்றுபக்கமும் கண்ணாடித் தடுப்புகொண்ட பெரிய அறை. அறைக்கு வெளியே விசாலமான புல்தரை... இந்தப் பக்கம் தண்ணீரின் சில்லிப்பும், சலசலப்பும் கலந்த நீச்சல் குளம். கட்டைச் சுவரைத் தாண்டி, நீளமான கரும் பாம்பின் மேல் ஊறும் எறும்புகளாக வாகனங்கள்.
இப்படி ஒரு அட்மாஸ்பியரில் சந்திப்பவர்கள் இவர் கேட்கும் விஷயங்களுக்கு ஓகே சொல்லி விடுவார்கள். தான் யார் என்பதைத் தன் செயல்களில், சுற்றுப்புறங்களிலேயே விவரித்துவிடுவதும் ஒருவகையான மூளைதனம்தான். லிங்கம் அந்த ரகம். ஐடியாவை விற்று மூலப்பொருள் வாங்கும் ரகம்.
எந்த பிஸினஸ் தொடங்க இருப்பவரும் இதை முயற்சிக்கலாம். உங்கள் திட்டங்களை, புதுமையான சிந்தனைகளை முதலில் சரியான வங்கி அதிகாரியிடம் நிரூபித்தால், வியாபாரத்துக்குத் தேவையான பணத்தைக் கடனாகத் தரத் தயாராவார்.
லங்கா லிங்கம் பேசும்போது, ‘ஏன்னா...’ என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதைக் கவனித்திருக்கிறேன். ‘ஏன்?’ என்ற வார்த்தை கேட்காமல் வாழ்க்கை மட்டுமல்ல... பிஸினஸும் இல்லை என்பது அவரது வாதம்.
இந்த ‘ஏன்?’ உள்ளேதான் இருக்கிறது பிஸினஸ் வெற்றி ரகசியம். ஒரு விஷயத்தை டீல் செய்யும்போது, ஐந்து முறை ‘ஏன்?’ என்று கேட்டுப் பாருங்கள். பல பின்னணிகள் புரிய ஆரம்பிக்கும். சும்மா ஓர் உதாரணம் சொல்கிறேன்.
ஒரு மூங்கிலால் ஆன கூடை ஊஞ்சல் விற்கச் செல்கிறீர்கள். ‘குழந்தைகளும் வயதானவர்களும் வாங்குவார்கள். நகரத்தில் உள்ளவர்கள்தான் விரும்பி வாங்குவார்கள்’ என்ற நம்பிக்கையோடு மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்கிறீர்கள். ஆனால், அங்கே விற்பனை அதிகமில்லை. மாறாக, கிராமங்களில் அதிகம் விற்கிறது. ஏன் இப்படி..? தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஊஞ்சல் இரண்டு பேர் உட்கார்ந்து ஆடும் அளவுக்கு அகலமாக இருந்தது. கிராமத்துப் புதுமண ஜோடிகளும் தென்னந்தோப்பு பார்ட்டிகளும் ரொமான்ஸ் பண்ண இதைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் விசாரணையில் கிடைத்தால், அதையே விளம்பர வாசகமாக்கி, நகரத்திலும் விற்கமுடியுமே!
ஒருவேளை, உங்கள் எதிர்பார்ப்பு நடந்தே விட்டாலும், ‘ஏன்?’ என்று கேளுங்கள். உங்கள் வாடிக்கையாளர் எங்கே திருப்தியானார்? என்று விசாரித்தால், உங்களுக்கே தெரியாத ஒரு காரணத்தை அவர் சொல்லிவிடக்கூடும். அதில் முன்பைவிட இன்னும் முனைப்பாக இறங்கி பெரிய வளர்ச்சி அடைய முடியுமில்லையா..?
இப்படி ஒரு தயாரிப்பு நன்றாகப் போனாலும் சரி... எதிர்பார்ப்புக்கு மாறாக, படு டல்லானாலும் சரி... அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். முயற்சி செய்யுங்கள். அந்த ‘ஏன்?’-ல் இருக்கிறது சக்ஸஸ்!
இன்னொரு விஷயம், கஸ்டமர்கள் என்பவர்கள் நமக்கு இலவச அறிவுரை சொல்பவர்கள். நாம் தயாரிக்கும் பொருளைப் பயன்படுத்தும் அவர்களுக்கு பொய் சொல்லவோ, குழப்பவோ அவசியமில்லை. அவரைத் தவிர, வேறு யாராலும் தனக்கு இது, இந்த முறையில் இப்படித் தேவை என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியாது. நீங்கள் இலவச சாம்பிள் கொடுத்து அதன் பயன்பாட்டை அறியும்போதுகூட, அவர் முகஸ்துதிக்காக உங்கள் தயாரிப்பைப் புகழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால், காசு கொடுத்து வாங்கிய வாடிக்கையாளர் ஒரு தகவல் சொன்னால் அது உண்மை யாகத்தான் இருக்கும். இதில் இடத்துக்கு இடம் வேண்டு மானால் சிறிய மாறுபாடு இருக்குமே ஒழிய, உங்களைத் தேடிவந்து பாராட்டோ புகாரோ சொன்னால் அதற்கு மதிப்பளியுங்கள். உங்கள் தயாரிப்பின் தரம் நிச்சயம் உயரும்.
அதுபோலதான் ஊழியர்கள் விஷயமும். சம்பந்தமே இல்லாத ஒரு துறை ஊழியரிடம் இருந்து ஏதோ ஒரு யோசனை வரலாம். நிர்வாகத்திடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், எங்கோ பயன்பட்ட ஓர் அனுபவ விஷயத்தைக்கூட தன் யோசனை போல, அவர் சொல்ல முன் வரலாம். ‘இவர் யார் எனக்குச் சொல்வது?’ என்று எண்ணாமல் அந்த யோசனையைக் கனிவுடன் அணுகுங்கள். நிறுவன வளர்ச்சியையே உச்சாணிக் கொம்புக்குக் கொண்டு செல்வதாகக்கூட அது அமையலாம்.
என்னைப் பொறுத்தவரை எந்த சிந்தனையுமே தப்பானதில்லை. எனவே, அதைச் சொல்பவரின் ஆர்வத்துக்குக் காது கொடுங்கள். அதில் உங்கள் புத்திசாலித்தனத்தை இணைத்து இம்ப்ரூவ் செய்தால் மேலும் பிரகாசிக்கக்கூடும். ஐடியாக்களை முளையிலேயே கிள்ளாதீர்கள்.